
2025 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை ‘குற்றவாளி’ என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்திருக்கிறார்.
2025 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நகரத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய அந்தப் போட்டியில் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது, ஸ்ரேயஸ் ஐயர் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததை அடுத்து அந்த அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.
இறுதியில் கோப்பையையும் நழுவவிட்டது. இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயரை ‘கிரிமினல்’ என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்திருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “அனைவரும் ஸ்ரேயஸ் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது சரி தான்.
ஆனால், என்னுடைய கேள்விகள் என்னவென்றால் இறுதிப்போட்டியில் ஷ்ரேயஸ் என்ன செய்தார் என்பதுதான். இறுதிப்போட்டியில் அவர் அந்த மாதிரி ஒரு ஷார்ட் ஆடி ஆட்டமிழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தவறான முறையில் ஆட்டமிழந்து கோப்பையை அவர் தவறவிட்டுவிட்டார் என்று தான் நிச்சயமாக சொல்வேன். பஞ்சாப் அணியின் தோல்விக்குப் பின்னாலிருக்கும் குற்றவாளி என்றாலும் கேப்டன் தான். அவர் ஆடிய அந்த ஷார்ட் கிரிமினல் குற்றம்.
இந்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனை கூட கொடுக்கலாம். என்னை பொறுத்தவரை அவருக்கு மன்னிப்பே கிடையாது. நேர்மையாகச் சொன்னால், நான் அவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன்” எனவும் யோகராஜ் சிங் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.