
RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 47 பேர் படுகாயமடைந்தனர்.
கொண்டாட்ட நிகழ்வுக்கு சரியான திட்டமிடல் இல்லாததே உயிரிழப்புகளுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
மேலும் நேற்று இரவில் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அணி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “பெங்களூருவில் நேற்று நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மீதான மரியாதை மற்றும் துன்பத்தில் பங்கெடுப்பதன் அடையாளமாக 11 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி அளிப்பதாக RCB அறிவித்துள்ளது.
மேலும், நேற்றைய நிகழ்வில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ஆர்.சி.பி கேர்ஸ் (RCB Cares Fund) என்ற நிதியும் உருவாக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் எங்கள் ரசிகர்களே மையமாக இருப்பார்கள். துக்கத்திலும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.
:
The unfortunate incident in Bengaluru yesterday has caused a lot of anguish and pain to the RCB family. As a mark of respect and a gesture of solidarity, RCB has announced a financial… pic.twitter.com/C50WID1FEI
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 5, 2025