
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அரசு சார்பிலும், மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் சின்னசாமி ஸ்டேடியத்திலும் ஆர்.சி.பி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால், இரண்டு இடங்களிலும் ரசிகர்கள் அதிகளவில் கூடினர். குறிப்பாக, ஸ்டேடியதுக்கு வெளியே மிகப்பெரும் அளவில் ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
முறையான திட்டமிடல், முன்னேற்பாடுகள் இன்றி அவசரமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதே இத்தகைய துயர சம்பவத்துக்கு காரணம் என அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
அரசோ, லட்சக்கணக்கில் ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்காததால் இவ்வளவு பெரிய கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு முதல்முறையாக உலகக் கோப்பை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம் என வலியுறுத்தியிருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்துப் பேசிய கபில் தேவ், “அதைப் பற்றி மிகவும் மோசமாக உணர்கிறேன். இதிலிருந்து ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்த முறை வெற்றிக் கொண்டாட்டம் நடக்கும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் தவறு செய்கிறார்கள்.
ஆனால், அந்தத் தவறுகள் வாழ்க்கையை இழக்குமளவுக்கு இருக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் எந்த அணி வென்றாலும் அமைதியாக இருங்கள்.
கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியமானது. அப்படியே இருப்போம்.” என்று கூறினார்.