
பெங்களுருவில் நேற்று (ஜூன் 4) ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
முறையான திட்டமிடல் இல்லாததும், கூட்ட நெரிசலைச் சரியாகக் கையாளாததுமே இந்த சோக சம்பவத்துக்கு காரணம் என மாநில காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மறுபக்கம், இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
இவ்வாறிருக்க, நேற்றைய சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு, நீதிபதிகள் வி. காமேஸ்வர் ராவ், சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 5) காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் லோஹித் ஜி ஹனுமாபுரா, “சம்பவத்தின் தன்மை, நிர்வாகத் தோல்விகளுக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.” என்று வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களைச் சமர்ப்பிப்பதாக அரசின் தலைமை வழக்கறிஞர் சசி கிரண் ஷெட்டி தெரிவிக்க, வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், மீண்டும் பிற்பகலில் தொடங்கிய விசாரணையில் மேலும் பல வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அதில், மூத்த வழக்கறிஞர் அருணா ஷியாம், “சம்பவத்தின்போது ஆம்புலன்ஸுகள் எங்கே அனுப்பப்பட்டன என்பதை அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
அதோடு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டியவரே விசாரணை நடத்த நியமிக்கப்பட்டிருப்பதால், சுதந்திரமான விசாரணை அமைப்பை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.” என்றார்.

அவரைத் தொடர்ந்து மற்றொரு வழக்கறிஞர், “மாநில அரசாக இருந்தாலும் சரி, மாநில கிரிக்கெட் சங்கமாக இருந்தாலும் சரி, இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது யார்? என்ற கேள்விக்கு பொதுமக்களுக்குப் பதில் வேண்டும்.
நாட்டுக்காகவோ அல்லது மாநிலத்துக்காகவோ விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?
எதற்காக சட்டமன்றம் (விதான் சவுதா) மற்றும் சின்னசாமி மைதானம் என இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது?” என்று கேள்விகளை அடுக்கினார்.
இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் சசி கிரண் ஷெட்டி, “இந்த விஷயத்தில் எந்தவிதமான எதிர்மறை அணுகுமுறையையும் அரசு எடுக்கவில்லை. மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 15 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
விசாரணை அதிகாரிகளிடம் தகவலளிக்க பொதுமக்கள் மற்றும் சாட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைவரின் பரிசீலனைக்காக அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்வோம். எனவே, எதாவது மறைக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறினார்.
வாதத்தைத் தொடர்ந்து நீதிபதிகள், “இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவங்களின்போது, அருகில் ஆம்புலன்ஸுகள் இருப்பதை உறுதி செய்தல், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக தகவல் அளிப்பது உள்ளிட்ட ஒரு நிலையான செயல்பாட்டு நெறிமுறையை (SOP) அரசு வைத்திருப்பது அவசியம்” என்று குறிப்பிட்டனர்.

அப்போது சசி கிரண் ஷெட்டி, “சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸுகள் இருந்தன. ஆனால், 30,000 பேர் அமரக்கூடிய மைதானத்துக்கு வெளியே 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடினர்.
அதனால், ஆம்புலன்ஸுகள் அங்கு போதுமானதாக இல்லை. மேலும், சம்பவத்தின்போது காவல்துறை ஆணையர் உட்பட 1,483 அதிகாரிகள் மைதானத்தில் இறந்தனர்.
இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பதில் அரசு கவனம் செலுத்தும்.” என்று கூறினார்.
இறுதியாக வாதங்களின் முடிவில் நீதிமன்றம், இந்த வழக்கைத் தாமாக முன்வந்து பதிவுசெய்ய நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, ஜூன் 10-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.