
‘பெங்களூரு கூட்ட நெரிசல்!’
ஐ.பி.எல் யை ஆர்சிபி அணி வென்றதற்காக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான பேர் காயம்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பெருந்துயர் இது. அத்தனை பேருக்கும் ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும் விளையாட்டின் பெயரில் இது நடந்திருப்பது இன்னும் பெரிய சோகம்.
ஆனால், இந்த சம்பவத்தின் வழி நாம் வேறு சில விஷயங்களின் மீது கவனம் கொடுத்தாக வேண்டும். எதனால் இப்படி நடக்கிறது? விளையாட்டை பார்க்கும் மக்களின் மனநிலை என்னவாக மாறியிருக்கிறது? அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக விளையாட்டுகளின் மீதும் எப்படி பீடித்திருக்கின்றன போன்ற கேள்விகளுக்கும் முகம் கொடுத்தே ஆக வேண்டும்.
‘ஆர்சிபியின் வெற்றி…கன்னடர்களின் வெற்றியல்ல…’
ஆர்சிபி அணியின் வெற்றியை கன்னடர்களின் வெற்றியாக கர்நாடாகாவின் வெற்றியாக சித்தரிக்க முயல்வதிலிருந்துதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. அந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக கர்நாடகாவின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ‘கர்நாடக அரசும் கர்நாடக மக்களும் ஆர்சிபி அணியோடு நிற்கிறோம். அவர்கள் வெல்வார்கள்.’ என்கிறார்.

அடிப்படை புரிதலற்ற பேச்சு இது அல்லது எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு ஆர்சிபியின் வெற்றியை கர்நாடாகாவின் வெற்றியாக கர்நாடக அரசின் வெற்றியாக கன்னட மக்களின் வெற்றியாக சித்தரிக்க முயலும் வகையிலான பேச்சு அது. ஐ.பி.எல் தொடரில் தனியார் முதலாளிகளால் உரிமை கொண்டிருக்கும் ஒரு அணியை எப்படி ஒரு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாக பார்க்க முடியும்? அவர்களின் வெற்றியை எப்படி கர்நாடகாவின் வெற்றியாக பார்க்க முடியும்?
‘இதில் என்ன பெருமை இருக்கிறது?’
ஆர்சிபியின் வெற்றி கர்நாடகாவின் வெற்றி அல்ல, கன்னடத்தின் வெற்றி அல்ல. அந்த அணி ஒன்றும் கர்நாடகத்தின் அடையாளம் இல்லை. ஆனால், இப்படியெல்லாம்தான் அங்கே கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். டி.கே.சிவக்குமார் அந்த உணர்வில் லிட்டர் லிட்டராக எண்ணெய்யை ஊற்றி கொழுத்தி விட்டிருக்கிறார். இந்த அணியை விமான நிலையம் வரை சென்று பொன்னாடை போர்த்தி அழைத்து வரவும், சட்டசபை வளாகத்துக்குள் வைத்து கௌரவிக்கவும் என்ன தேவை இருக்கிறது? அப்படி என்ன இவர்கள் கர்நாடகாவின் பெருமையை தூக்கி நிறுத்திவிட்டார்கள்?
Visited Bowring Hospital to meet those injured and the bereaved in today’s unfortunate incident near Chinnaswamy Stadium. Saddened to witness their pain and speak to the victims during these difficult moments.
I assured them of the best medical care and full support from the… pic.twitter.com/fwb3hNlltM
— DK Shivakumar (@DKShivakumar) June 4, 2025
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் காண மருத்துவமனைக்கு நேரில் சென்று அதை X தளத்தில் பதிவிடுகிறார். அப்போதும் அந்த ‘பெருமை’ என்கிற விஷயத்தை அவர் விடவில்லை. ‘நம்முடைய பெருமையும் பேரார்வமும் எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்க வேண்டும். உயிரை பறிக்கும் விபரீதத்தை அல்ல.’ மருத்துவமனையில் இருந்துகொண்டு இப்படி ட்வீட் செய்திருக்கிறார். நிலைமை கையை மீறி சென்ற பிறகும் அந்த போலி பெருமிதத்தை கைவிட அவர் தயாராக இல்லை.

ஆர்சிபிக்கு இருக்கும் வரவேற்பை அந்த அணிக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை தங்களின் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டி மட்டுமே இப்படி பெருமித நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன. இந்த பிரச்சனை டி.கே.சிவக்குமாரில் இருந்து ஆரம்பிப்பதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக விளையாட்டின் அப்பிக்கொள்கின்றனர்.
‘விளையாட்டை அபகரிக்கும் அரசியலர்கள்…’
ஆரம்பத்திலிருந்தே பெங்களூரு அணி கன்னடத்தின் பெருமை என ஊதி ஊதி வைக்கப்பட்டிருந்த பலூனை டி.கே.சிவக்குமாரும் சித்தராமைய்யாவும் ஒரே அடியாக வெடிக்க வைத்துவிட்டனர்.
இந்த விவகாரத்தை கர்நாடகாவோடு சுருக்கி மட்டுமே பார்க்க முடியாது. மோடி இந்திய அணியை வைத்துக் கொண்டு இதே வேலையை பார்த்திருக்கிறார். உச்சபட்ச தேசியவாதமும் தேசப்பற்றும்தான் பா.ஜ.க மற்றும் மோடி அரசியலின் அடிப்படை. உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பைட்டர் ஜெட்களை வைத்து சாகசம் காட்ட வேண்டிய தேவை என்ன? இராணுவப் பலத்தை விளையாட்டு மைதானத்தில் கண்காட்சிப் பொருளாக ஏன் காட்ட வேண்டும்?
தோல்வியடைந்த பிறகு வீரர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று எதற்கு விளம்பரம் தேட வேண்டும்? இத்தனைக்கும் பிசிசிஐ ஒரு தனியார் அமைப்பு. அரசு கொடுக்கும் சில சலுகைகளை தவிர அங்கே அவர்களுக்கு வேறெந்த பங்களிப்பும் இல்லை. அப்படியிருக்க ஏன் அந்த நாடகமெல்லாம்? அஹமதாபாத்தில் தன்னுடைய பெயரில் ஒரு மைதானத்தை வைத்துக் கொண்டு முக்கியமான போட்டிகள் அத்தனையையும் அந்த மைதானத்தில் மட்டுமே நடக்கச் செய்வது ஏன்? விளையாட்டின் வரலாற்றில் வலிந்து தன்னுடைய பெயரையும் இருப்பையும் காட்டிக் கொள்ள முயல்வது ஏன்? ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் இசைக் கச்சேரியை நடத்தியிருந்தார்கள். இராணுவ வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை அதுதானா? இரு நாட்டுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. மாறி மாறி தாக்குதல் நடக்கிறது என்று தெரிந்தும் தாக்குதல் நடக்கும் இடத்துக்கு அருகேயே வம்படியாக தரம்சாலாவில் கொண்டு ஐ.பி.எல் போட்டியை நடத்தியே தீருவேன் என வைத்தது ஏன்? தங்களின் பராக்கிரமத்தை காட்ட அத்தனை மக்களின் உயிரும் வீரர்களின் உயிரும் பணயம் வைக்கப்பட வேண்டுமா? நிலைமை முற்றி சிக்கலானவுடன் போட்டியை அப்படியே பாதியில் நிறுத்தினார்கள்.
‘இதுதான் உங்களின் மரியாதையா?
பதற்றமான இடத்தில் தெரிந்தே போட்டியை கொண்டு வைத்து இராணுவத்துக்கு இடையூறு மேல் இடையூறு கொடுப்பதுதான் இவர்கள் இராணுவத்தின் மீது வைத்திருக்கும் மரியாதைக்கான சான்றா? பிரச்சனையெல்லாம் முடிந்து ஐ.பி.எல் மீண்டும் தொடங்குகையில் சியர் லீடர்கள் வேண்டாம், வானவேடிக்கைகள் வேண்டாம் என சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான் வீரர்களே கோரிக்கை வைத்தனர். எதையும் காது கொடுத்தே கேட்கவில்லையே. எங்கெங்கெல்லாம் தங்களுக்கு சாதகமான அரசியலை விளம்பரப்படுத்த முடியும் என்றே பார்க்கின்றனர். விளையாட்டையும் அதற்கான ஒரு கருவியாக பார்க்கின்றனர்.

‘ரசிகர்களின் மனநிலை மாற்றம்…’
இங்கே ரசிகர்களின் மனநிலை எப்படி மாறியிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். நாம் கல்வியறிவு பெற்ற சமூகமாக நிறையவே முன்னேறியிருக்கிறோம். ஆனால், இந்த ஆர்சிபி அணி கோப்பையை வெல்லவில்லை என்பதை வைத்து அத்தனை மலினமாக சமூகவலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இதே ஆர்சிபியினுடைய பெண்கள் அணி கடந்த ஆண்டு கோப்பையை வென்றுவிட்டது. அதை வைத்து இந்த அணியை ‘பொம்பள கப்’ என தரம் தாழ்ந்து அறிவற்ற கேலித்தனங்களை ஒரு ரசிகர் கூட்டம் செய்திருக்கும். Franchise கிரிக்கெட்டின் நல்ல விஷயங்களில் ஒன்று, அது எல்லைகளை உடைக்கும். பல வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் ஐ.பி.எல் இல் ஆடுகிறார்கள். அவர்கள் நாட்டில் அந்த வீரர்கள் கொண்டாடப்படுவதை விட இங்கே அதிகமாக கொண்டாடப்படுகிறார்கள்.
தோனி உத்திரப்பிரதேசத்தில் சென்று ஆடினால் அங்குள்ள லக்னோ அணியை விட சென்னை அணிக்குதான் அதிக ஆதரவு கிடைக்கும். எல்லைகளை கடந்து சிந்தித்தல் ரொம்பவே நல்ல விஷயம். அதை இந்த Franchise கிரிக்கெட் செய்கிறது. ஆனால், இதன் எதிர்பக்கத்தையும் பார்க்க வேண்டும். இந்த லீக் கிரிக்கெட் வடிவம், ரசிகர்களை இன்னும் பல கூறுகளாக பிளவுபடவும் வைக்கிறது. அந்த பிளவிற்கு தூபம் போடும் வகையில் இங்கிருக்கும் வணிகமும் செயல்படுகிறது. ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் சேனலை தொடங்கி வைத்து, அந்தந்த பிராந்திய மொழிகளை புகழ்ந்தும் மற்ற அணிகளை இகழ்ந்து பேசும் வகையில் கமெண்ட்ரிக்களை வடிவமைக்கிறார்கள்.

‘பிளவும் வியாபாரமும்!’
இது இயல்பிலேயே ரசிகர்களுக்குள் ஒருவித வெறுப்புணர்வை தூண்டுகிறது. கிரிக்கெட் கமெண்ட்ரி என்பது நடுநிலையாக இருக்க வேண்டும். ஒரு தரப்புக்கு துதிபாடி இன்னொரு தரப்பை வேண்டா வெறுப்பாக பேசுவது கமெண்ட்ரி அல்ல. எல்லா விளையாட்டுகளை போலவே கிரிக்கெட்டும் ஒரு அறமதிப்பீட்டை கொண்டதாக இருந்தது. அதை உணர்ந்து பக்குவமான ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்தும் ரசிகர் கூட்டமும் இருந்தது. ஆனால், இப்போது அப்படி எதுவுமே இல்லை. ‘தோனி வந்தால் போதும்…தோனி நின்றால் போதும்…’ என சினிமா ரசிகர்களை போல இந்த ரசிகர் கூட்டமும் மாறிவிட்டது. தங்களுக்கு லாபம் கிடைத்தால் போதும் என்பதால் இது எதையுமே நிர்வகிக்கும் நிலையில் இருப்பவர்கள் கவனிப்பதே இல்லை.
அவர்களுக்கு லாபம் மட்டும் போதும். வியாபாரம் மட்டும் போதும். மக்களைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டிய அக்கறை அவர்களுக்கு கிடையாது.
ஆர்சிபியின் வெற்றியை கர்நாடாகவின் வெற்றியாக கன்னட மக்களின் வெற்றியாக நிறுவ முயன்று மக்களை பலியாக்குகிறீர்களே. என்றைக்காவது இந்த ஐ.பி.எல் கூட்டம் மக்களுக்காக நின்றிருக்கிறதா? ஜார்ஜ் ப்ளாய்டு கொல்லப்பட்ட போது உலகம் முழுக்க Black Lives Matter ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகளின் முன்பு வீரர்கள் மண்டியிட்டு கையை உயர்த்தி அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நிற்போம் உறுதியேற்றுக் கொண்டனர். உலகம் முழுக்க எல்லா கிரிக்கெட் தொடரின் போதுமே இது நடந்திருந்தது. ஐ.பி.எல் இல் மட்டும் நடக்கவில்லை. கப்சிப்பென வாயை மூடிக் கொண்டு இருந்தது ஐ.பி.எல் நிர்வாகம்.
அவர்கள் அவ்வளவுதான். அந்த ஐ.பி.எல் யையும் அதில் ஆடும் ஒரு அணியின் வெற்றியையையும் நம்முடைய வெற்றியாகவும் அவர்களை நம்முடைய மாநிலத்தின் அடையாளமாகவும் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதே நல்லது.!