
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது தந்தை ஆண்டி.
கடந்த 2023 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாய் கவிதா கூலித்தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதில் இரண்டாவது மகளான ராஜேஸ்வரி கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில், பழங்குடியினர் பிரிவில் இந்திய அளவில் 417வது இடம் பிடித்து, ஐஐடியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
எட்டாம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளியில் படித்த ராஜேஸ்வரி, குடும்பச் சூழல் காரணமாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கருமந்துறை கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார்.
ராஜேஸ்வரி, பத்தாம் வகுப்பில் 500க்கு 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 521 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு குறித்து ராஜேஸ்வரியின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் அரசுப் பயிற்சி மையத்தில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
தந்தையின் கனவான சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையை, தந்தையின் மறைவிற்குப் பிறகு நிறைவேற்ற வேண்டும் என நினைத்து கடினமாகப் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

கருமந்துறை மலையிலிருந்து பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறுவது இதுவே முதன்முறை.
ராஜேஸ்வரி, ஐஐடி மெட்ராஸ் அல்லது பாம்பே கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
கருமந்துறை மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் மாணவி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றதை கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ராஜேஸ்வரியைப் பாராட்டி வருகின்றனர்.