
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலை வைத்து பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தையொட்டி ரசிகர்கள் திரண்ட சின்னசாமி ஸ்டேடியம் வெளியே நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை என்ற எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், "பாஜகவினர் யாருக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கர்நாடக மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மட்டுமே நான் பதில் சொல்ல வேண்டும்.