• June 5, 2025
  • NewsEditor
  • 0

கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஐஐடி தகுதித் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்ட் 2025 (JEE Advance 2025) தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் 417-வது இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

உடல்நலக்குறைவால் தந்தை உயிரிழந்த ஓராண்டில் கடுமையாகப் படித்து, ஐஐடி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதைத்தொடர்ந்து சென்னை ஐஐடி-யில் கால்தடம் பதிக்கவிருக்கும் மாணவி ராஜேஷ்வரியைப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி

இந்த நிலையில், மாணவி ராஜேஸ்வரியின் ஐஐடி படிப்புச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஷ்வரி, 12-ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், JEE தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, சென்னை ஐஐடி-யில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.

மாணவி ராஜேஷ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.

கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஷ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.” என்று எக்ஸ் தளத்தில் வாழ்த்தியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *