
பெங்களூருவைச் சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர், தான் வேலை பார்க்கும் சூழல் குறித்து மனமுடைந்து போய் லிங்க்ட் இன் தளத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு இப்போது வேகமாக பரவி வருகிறது. முன்னதாக அவர் தினரசி நடக்கும் டீம் மீட்டிங்கில், `தனக்கு எந்த ஆதரவும் கிடைப்பதில்லை, அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது’ என கலங்கி அழுதிருக்கிறார். அதன் பின்னரே இந்த பதிவை அவர் வெளியிட்டிருக்கிறார்,
ஷ்ரவன் என்ற அந்த பொறியாளர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன்னை வேலைக்கு சேர்த்த போது நிறுவனத்தில் சார்பில் எந்தவித வழிகாட்டுதலும் முறையாக வழங்கப்படவில்லை என்றும், வேலையை எப்படி செய்வது என்றும் அது சார்ந்த சந்தேகங்களுக்கு முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும், சந்தேகங்களை கேட்டால் பலவீனமாக பார்க்கப்பட்டு அவமதிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
‘நாம் செய்யும் வேலைக்கு நம்மை பாராட்டுவார்கள் என எதிர்பார்ப்பதையெல்லாம் நிறுத்திவிட்டோம். நம்மை எல்லார் முன்பும் நிற்க வைத்து அவமானப்படுத்தாமல் இருந்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டோம்.’
வெறுத்து போய் வேலையை விட்டு செல்கிறேன் என கூறிய போதும், ‘குட்லக், நீ அங்கே சென்று எவ்வளவு நாட்கள் இருக்கிறாய் என்று பார்ப்போம்.’ எனக் கூறுகிறார்கள். ‘ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதில்லை. தங்கள் உகந்த நல்ல சூழல் இல்லையென அந்த சூழலிலிருந்து தப்பிக்கவே நிறுவனங்களிலிருந்து வெளியேறுகிறார்கள்.

ஒரு நல்ல மேனேஜரால் நமக்கு பிடிக்காத வேலையை கூட சிறந்த வேலையை மாற்றிக் கொடுக்க முடியும். அதேமாதிரி, ஒரு மோசமான மேனேஜரால் நமக்கு பிடித்த வேலையையும் நரகமாக்கிவிட முடியும்.’ எனக் கூறியிருக்கிறார்.
மனம் வெறுத்து போய் அந்த ஊழியர் இட்டிருக்கு பதிவு இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், `தற்போது தொடர்ந்து வெளிவரும் வேலையிழப்பு தகவல்கள் ஊழியர்களை அதீத மன அழுத்ததுக்கு கொண்டு செல்வதாகவும், கூடுதலாக அல்லது செய்ய முடியாத அளவுக்கு டாஸ்குகளை கொடுப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்’ அந்த பதிவை பகிரும் இணைய வாசிகள்.