
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐபிஎல் கோப்பை வென்றதை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட விரும்பிய முயற்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பதின்பருவத்தினர் உட்பட 11 பேர் மரணித்துள்ளனர்.
ஆர்.சி.பி அணி வெற்றிபெற்ற உடனேயே இரவில் பெங்களூரு தெருக்களில் ரசிகர்கள் கூடி வெறியோடு கொண்டாடித் தீர்த்தனர். மறுநாள் திறந்தவெளி கொண்டாட்டம் குறித்த செய்தி வெளியானதால், காலை முதலே சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ரசிகர்கள் கூடிவிட்டனர்.
திறந்தவெளி ஊர்வலம் நடைபெற்றால் ஒழுங்முறையோடு நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறையும், போக்குவரத்து அதிகாரிகளும் சமூக ஊடகங்கள் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகப்படியாக மக்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டு, விரைவாகவே தள்ளுமுள்ளும் குழப்பமும் எழுந்து சோகத்துக்கு வழிவகுத்துள்ளது.
RCB சொன்ன காரணம்…
ரசிகர்கள் உணர்வெழுச்சியில் இருப்பதனால் புதன் கிழமை கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்த வேண்டாம் என காவல்துறை சார்பில் ஆர்.சி.பி நிர்வாகம் மற்றும் மாநில அரசிடம் எச்சரிக்கப்பட்டதாக டெக்கான் ஹெரால்டு செய்தி தளம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களின் உத்வேகம் கொஞ்சம் தணிந்தபிறகு ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களை நடத்த காவல்துறைக் கேட்டுக்கொண்டதாகவும், அணிவகுப்பைத் தள்ளி வைத்தால் வெளிநாட்டு வீரர்கள் உடன் இருக்கமாட்டார்களே என்று ஆர்.சி.பி அணி நிர்வாகம் கவலைத் தெரிவித்ததாகவும் டெக்கான் ஹெரால்டு குறிப்பிடுகிறது.
காவல்துறை அதிகாரி சொன்ன தகவல்கள்…
“செவ்வாய் இரவு முதல் புதன் கிழமை வரை எந்த கொண்டாட்டத்தையும் நடத்த வேண்டாம் என ஆர்.சி.பி அணியையும் மாநில அரசையும் ஒப்புக்கொள்ள வைக்க முயன்றோம்…
வெவ்வேறு இடங்களில் அல்லாமல், மைதானத்துக்குள் வீரர்களை அழைத்து கொண்டாட்டங்களை நடத்திவிடுவதே சிறந்தது என வலியுறுத்தினோம்.” என ஒரு காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஏற்கெனவே இந்தியா – பாகிஸ்தான் மோதலால் ஐபிஎல் போட்டிகள் தடைபட்டிருந்ததால், சர்வதேச வீரர்களை மீண்டும் சில நாட்கள் தங்க வைப்பது முடியாத காரணமாக இருக்கும் என ஆர்.சி.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அதிகாரி, “இயல்பாகவே அரசு இதிலிருந்து கொஞ்சம் பெயரை சம்பாதிக்க நினைத்திருக்கும். அரசு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்காவிட்டால் அதுவும் இன்னொரு குழப்பத்துக்கு வழிவகுத்திருக்கும்… செவ்வாய் இரவு முதல் அதிகாலை வரை போலீஸ் கமிஷனர் முதல் கான்ஸ்டபிள் வரை அனைவரும் தெருக்களில் குழப்பங்களைக் கட்டுப்படுத்துவதில் சோர்வடைந்துவிட்டனர். இது முழு பைத்தியக்காரத்தனம். இந்த மாதிரியான வெறித்தனத்தை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை.” என்றும் கூறியிருக்கிறார்.