
சென்னை: சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை (incinerator) திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972-ம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' (Beat Plastic Pollution) என்பதை 2025 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான ஐநா ஒப்பந்த (UN Global Plastics Treaty) பேச்சுவார்த்தை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி, 2024 வரை உருகுவே, பிரான்ஸ், கென்யா, நைரோபி, தென் கொரியா ஆகிய நாடுகளில் 5 முறை நடந்தது. கடைசியில் தோல்வியில் முடிந்தது.