
18 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி வெற்றி பெற்றதையடுத்து, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. அங்கே லட்சக்கணக்கில் மக்கள் கூட, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்… 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடகா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியதாவது…
“நாங்கள் விதான் சவுதாவில் (கர்நாடகா சட்டமன்ற வளாகம்) சுமார் 1 லட்ச மக்களும், சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே 25,000 பேர் கூடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், 2.5 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
8.7 லட்ச மெட்ரோ டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்று கருதும்பட்சத்தில், மொத்தம் 8 லட்சம் பேர் ஸ்டேடியத்தின் முன் கூடியுள்ளனர். கிரிக்கெட்டிற்காக இப்படி முன்பு அதிக கூட்டம் கூடியதில்லை. எந்த உயிரிழப்புகளும் ஏற்படாமல் இருந்திருந்தால் இது ஒரு சாதனையாக மாறியிருக்கும்.
நாங்கள் ஆர்.சி.பியிடமும், கர்நாடகா கிரிக்கெட் சங்கத்திடமும் பேசியிருக்கிறோம். அவர்கள் அவர்களின் கருத்துகளை முன்வைத்தனர். இது மீண்டும் நடக்காமல் இருக்க, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டேன்” என்று பேசியுள்ளார்.
உயிரிழந்த 11 பேரும் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.