
காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கராய சக்திவேல் (கமல் ஹாசன்) ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் தாதாவாக டெல்லியை ஆளும் ‘தக்’.
ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து சக்திவேல் தப்பிக்க உதவுகிறான் சிறுவன் அமரன் (சிம்பு). அதற்கு நன்றிக் கடனாக அமரனைத் தன் மகனாகவே கருதி வளர்க்கிறார் சக்திவேல்.
ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பாவின் ராஜ்ஜியத்தைப் பிடிக்க நிற்கிறார் மகன். அதற்கான காரணம் என்ன, துரோகம் செய்தவர்களை சக்திவேல் எப்படியெல்லாம் தண்டித்தார் என்பதை “தக்ஸின் வாழ்க்கை” எனத் தந்திருக்கிறார் மணிரத்னம்.
மனைவி, துணைவி எனக் காதல் தளும்பத் தளும்ப ரோமன்ஸ் மோடில் புன்னகை மன்னனாக ரசிக்க வைப்பவர், ரௌத்திரம் காட்டும் ‘யக்கூசா’ மோடில் ‘நாயகன் மீண்டும் வரார்’ ஹிரோயஸத்தைக் கடைசி வரையிலும் பதுக்கியே வைத்திருக்கிறார்.
இருப்பினும் திருச்செந்தூர் கடற்கரையில் மனைவியிடம் உணர்வுபூர்வமாகப் பேசும் காட்சியில், நடிப்பில் சக்திவேலாக மிரட்டுகிறார்.
தன்மேல் சந்தேகம் வருகிற இடத்தில் ஏமாற்றம், ‘நான்தான் இனி ரங்கராய சக்திவேல்’ என்கிற இடத்தில் திமிர் என சிலம்பரசன் டி.ஆர் தன் பாத்திரத்தைத் திறம்படத் தாங்கியிருக்கிறார். இருப்பினும் இரண்டாம் பாதியில் அவர் நம் மனதில் பதியும் காட்சிகள் குறைவே!
குழப்பமான மனநிலையைப் பிரதிபலிக்கும் த்ரிஷாவின் நடிப்பிலும் குறையேதுமில்லை.
அரியணைக்கு வஞ்சம் கொண்ட அண்ணனாகத் தன்னுடைய பலமான ஏரியாவில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நாசர்.

ஒருசில காட்சிகளே வந்தாலும் ஐஸ்வர்யா லட்சுமி மனதில் நிற்கிறார். இதுதவிர கதாபாத்திர வளைவுகள் அரை வட்டம், கால் வட்டம் போட்ட அளவில் முழுமையடையாமலே போக அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அலி பாசல் ஆகியோரின் கதாபாத்திரங்கள் தொக்கி நிற்கின்றன.
வில்லன் கதாபாத்திரத்திற்கு வளைவு என்ன, ஆரமே போடப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றமே! இருப்பினும் மகேஷ் மஞ்ச்ரேகர், அர்ஜுன் சிதம்பரம் போல அனைவரும் என்ன வளைவோ அதற்குரிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
கட்டடங்களுக்கு மத்தியில் சிறுவன் நிற்கும் நிழற்படமான காட்சியமைப்பு, காத்மாண்டுவில் பனிக்கு மத்தியில் மீண்டு எழுகிற இடம் ஆகிய காட்சிகளில் உலகத்தரமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ரவி கே.சந்திரன்.
குறிப்பாக, ஆரம்பக் காட்சி தொடங்கி, அன்பறிவின் அட்டகாசமான சண்டை வடிவமைப்பை நேர்த்தியான கோணங்களில் பதிவு செய்திருக்கிறார்.
இந்தத் தரத்திற்கு எந்தச் சேதாரமும் இல்லாத படத்தொகுப்பைச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். ஆனால் எந்த ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் செல்லும் இரண்டாம் பாதிக்கு இத்தனை இரக்கம் காட்டியிருக்கத் தேவையில்லை சாரே!
கறுப்பு வெள்ளையாக எந்தவித உணர்வும் தோன்றாத தேமே நகரும் காட்சிகளிலும் ‘அஞ்சு வண்ண பூவே’ என ரீங்காரக் குரலில் நெஞ்சத்தில் வண்ணம் பூசுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

அதே பாடலின் பெண்பால் வெர்ஷனில் சாருலதா மணியும் சற்றே ஆறுதல் தருகின்றார்.
பின்னணி இசை முதல் பாதியில் காட்சிகளின் மீட்டரில் இருக்க, இரண்டாம் பாதியில் என்ன மீட்டர் என்று தெரியாத காட்சிகளோடு சேர்ந்து குழம்பி நிற்கிறது.
இவற்றைத் தாண்டி பிளாஷ்பேக்கில் வரும் டி-ஏஜிங் காட்சிகளில் இளம் வயது கமல்ஹாசனையும் நாசரையும் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பு!
படம் தொடங்கியபோதே இந்தக் கதை இப்படித்தான், முடிவு இப்படித்தான் என்பதைக் கணித்துவிட முடிகிறது. சிலபஸ் மாறாமல் அதுவே திரையிலும் ஒவ்வொன்றாக அரங்கேறுகிறது.

இதனால் மோதல்கள், திருப்பங்கள் என எதிலும் சுவாரஸ்யம் உண்டாகவே இல்லை. யார் இவர்கள், இக்கதாபாத்திரங்களின் உயிர் போனால் நாம் ஏன் வருந்தவேண்டும் என்று கதையோடு சேர்ந்து பயணிக்கத் தேவையான எந்தக் காரணமும் கிடைக்கவில்லை.
இருப்பினும் நடிகர்களின் பங்களிப்பு, தேர்ந்த ஆக்கம் ஆகியவை மோசமில்லா ஒரு டிராமாவைக் கண்ட அரை திருப்தி உணர்வை முதல் பாதியில் கொடுக்கின்றன.
இரண்டாம் பாதி ஆரம்பிக்க, கோவா, காத்மாண்டு, டெல்லி, காயல்பட்டினம் என கதை ‘கட்’களில் வேகமாகச் சென்றாலும், அதற்காக எழுதப்பட்ட திரைக்கதையின் வழியே கூட்டமான பஸ்ஸில் மெதுவாக அந்த இடத்திற்குப் பயணித்தால் என்ன உணர்வு வருமோ அத்தகைய அயர்ச்சியே உண்டாகிறது.
‘நாயகன் மீண்டு வருகிற’ ஜனரஞ்சக படத்தில் லாஜிக் தேவையில்லை என்று நினைத்தாலும், ஒரு கட்டில் கோவா, அடுத்த கட்டில் டெல்லி என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கிறது.
குருதிப்புனலில் மிதக்கும் இரண்டாம் பாதியில் கத்தியும், துப்பாக்கியும் நாயகர்கள் மத்தியில் விளையாடிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த விளையாட்டு டி20 மோடில் நகராமல் ‘டெஸ்ட்’ மோடில் நகர்ந்து நம்மைச் சோதிக்கின்றன.

மேலும் அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எதற்காக கமிஷன் என்ற எந்தக் கேள்விக்கான பதில்களும் சொல்லப்படவில்லை. இவர்களைப் பிடிக்க வரும் போலீஸ் படையும் எட்ட நின்று வேடிக்கை பார்ப்பது எல்லாம் எக்ஸ்பைரியான மசாலா ஐட்டங்கள்!
தொழில்நுட்ப ரீதியாக ‘தக் லைஃப்’ கண்ணாடியைப் போட்டு மிரட்டும் இந்தப் படம், திரைக்கதையில் அந்தக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டதால் சுவாரஸ்யத்தை நாம் தேட வேண்டியதாக இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…