
பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தன் மகள் வழிப் பேரனான முகுந்தனை மாநில இளைஞரணித் தலைவராக அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ். அதற்கு அந்த மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, `கட்சிக்காரர்கள் என்னை பனையூர் அலுவலகத்தில் வந்து சந்திக்கலாம்’ என்று மைக்கில் சொல்லிவிட்டு வெளியேறினார்.
`எங்களுக்கு எல்லாமே ஐயாதான்…’
அதன்பிறகு தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி, `எங்களுக்கு எல்லாமே ஐயாதான். இது எங்கள் உட்கட்சி பிரச்னை’ என்று கூறிவிட்டு பனையூர் சென்றார்.
ஆனால் `இது உட்கட்சி பிரச்னை இல்லை. உள் குடும்பப் பிரச்னை’ என்று கிசுகிசுத்தனர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். இந்த நிலையில்தான், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பா.ம.க தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாகவும், செயல் தலைவராக அவர் நீடிப்பார் என்றும் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ராமதாஸ்.
அதன்பிறகு மே 10-ம் தேதி நடைபெற்ற பா.ம.க-வின் சித்திரை முழுநிலவு மாநாட்டில், `அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி, கட்சிக்குள்ளேயே கூட்டணி போன்றவை இங்கு நடக்காது’ என்று அன்புமணியை மறைமுகமாக சாடினார் ராமதாஸ். அதையடுத்து மே 29-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இளைஞரணி தலைவராக முகுந்தனே நீடிப்பார் என்றார்.
`நானே தலைவர்…’
அதையடுத்து, `அன்புமணி யார் கருத்தையும் கேட்க மாட்டார்… கூசாமல் பொய் பேசுவார்… பா.ஜ.க கூட்டணிக்காக அன்புமணியும் செளமியாவும் என் காலில் விழுந்தார்கள்… பெற்ற தாயை நோக்கி பாட்டிலைத் தூக்கி வீசினார் அன்புமணி… அவருக்கு அமைச்சர் பதவி வாங்கித் தந்திருக்கக் கூடாது’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.
அதையடுத்த சில மணி நேரங்களிலேயே, சொந்த காரணங்களுக்காக தன்னுடைய மாநில இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அன்புமணிக்கு கடிதம் அனுப்பினார் முகுந்தன். அதன் தொடர்ச்சியாக பா.ம.க பொருளாளர் திலகபாமா மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் மயிலம் சிவக்குமார் இருவரையும் பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ராமதாஸ்.
ராமதாஸின் குற்றச்சாட்டுகளை மறுத்த அன்புமணி, “இந்த உலகத்திலேயே எனக்கு பிடித்தது என் அம்மாதான். கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கவோ, சேர்க்கவோ பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குதான் அதிகாரம் இருக்கிறது. அதனால் நானே தலைவர். அங்கிருந்து பதவி நீக்கக் கடிதம் வந்தால், அடுத்த நிமிடம் என்னிடம் இருந்து நியமனக் கடிதம் வரும்” என்று சோழிங்கநல்லூர் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி அதிரடி காட்டினார் அன்புமணி.
அதன் தொடர்ச்சியாக அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்கி நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்க, மறுபுறம் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் கொடுத்து வருகிறார் அன்புமணி.
`இவர் செய்வதெல்லாம் சரியா…?’
இந்த நிலையில்தான் தனது தந்தையும், கட்சியின் நிறுவனறுமான ராமதாஸை சந்திக்க, இன்று காலை 9.15 மணிக்கு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார் அன்புமணி. அப்போது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், `அவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை’ என்று மறுக்கிறார் தோட்டத்தில் இருந்த கட்சியின் சீனியர் சிலர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “ஐயா பெரும்பாலும் காலையில் 10.30 மணிக்குதான் தன்னுடைய அறையை விட்டு வெளியே வருவார். அன்புமணி வருவது குறித்த எந்த தகவலும் அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. அதனால் இன்று காலை வந்த அன்புமணியை சந்திக்க விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டார் ஐயா. அதனால் தன்னுடைய அம்மாவை பார்த்து நலம் விசாரித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தன்னுடைய அக்காவிடம், `தேர்தல் நேரத்தில் இவர் செய்வதெல்லாம் சரியா ?’ என்று ஆதங்கப்பட்டுவிட்டு, அங்கிருந்து 10.15 மணிக்கு கிளம்பிச் சென்றார். தோட்டத்தை விட்டு வெளியேறி அன்புமணியின் கார் புதுச்சேரி பக்கம் திரும்பிய ஒரு சில விநாடிகளில், சென்னையில் இருந்து ஆடிட்டர் குருமூத்தியும், சைதை துரைசாமியும் வந்த கார் தோட்டத்திற்குள் நுழைந்தது.
அன்புமணி வெளியேறிய பிறகு உள்ளே வாருங்கள் என்று ஐயாவிடம் இருந்து சென்ற சிக்னல் காரணமாகவே, இந்த `உள்ளே வெளியே’ நிகழ்ந்தது” என்றார். தோட்டத்தில் இருந்து வெளியேறிய அன்புமணி, கார் கண்ணாடியைக் கூட இறக்கிவிடாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டுச் சென்றார்.
சுமார் 3 மணி நேர சந்திப்புக்குப் பிறகு வெளியேறிய ஆடிட்டர் குருமூர்த்தி, “ராமதாஸ் என்னுடைய நீண்டகால நண்பர். என்னை அவருக்கும் மிகவும் பிடிக்கும். அன்புமணி ராமதாஸ் வந்ததே எனக்குத் தெரியாது. பிரச்னை இருக்கும் இடத்துக்கு நான் செல்லவில்லை, நான் இருக்கும் இடத்தில் தான் பிரச்னை வருகிறது” என்று கூறிவிட்டுச் சென்றார்.