
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததிலிருந்து, பா.ஜ.க அரசைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.
அதனால்தான் என்னவோ, ஆபரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு எடுத்துரைக்கும் எம்.பி குழுக்களின் தலைவராக சசி தரூர் நியமிக்கப்பட்டார்.
இந்தக் குழுக்களில் இடம்பெறப் பிற கட்சிகளிடம் எம்.பிக்கள் பெயர் கேட்கப்பட்டபோது, காங்கிரஸ் கொடுத்த எம்.பிக்களின் பெயர் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பயணங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சசி தரூர் புகழ்ந்து வந்தார். இதற்கு அவரது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இது குறித்து தற்போது சசி தரூரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவரது பதில்…
“ஒருவர் தேச நலனுக்காகப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும் போது, இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்று நினைக்கிறேன்.
என்னுடைய நண்பர் சல்மான் குர்ஷித், ‘தேசப்பற்றுடன் இருப்பது இப்போது எவ்வளவு பெரிய கடினமான செயலா?’ என்று கேட்டிருப்பதை நான் பார்த்தேன்.
தேச நலனுக்காக ஒருவர் பாடுபடும்போது, அவரைக் கட்சிக்கு எதிரானவர் என்று யாராவது கருதினால், அவர்கள் அவர்களையே கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டுமே, தவிர, எங்களை அல்ல.
நாங்கள் இப்போது முக்கியமான தகவலை உலகிற்குத் தெரிவித்து வருகிறோம். இந்த நிலையில், ஒருவர் என்ன சொன்னார், என்ன சொல்லவில்லை என்பதை நினைத்துக் கவலைப்பட்டு அதிக நேரத்தைச் செலவிடமாட்டேன்”.
சசி தரூரிடம், ‘நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்வீர்களா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.
இன்னும் நான்கு ஆண்டுகள் எனக்குப் பதவிக் காலம் உண்டு. அதனால், இந்த மாதிரியான எந்தக் கேள்வியும் கேட்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.