
திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50).
கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்குமார் வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் திடீரென்று துப்பாக்கியைக் காட்டி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
இதை பார்த்த கருப்பசாமி அவர்களைத் தடுக்க முயன்றார். அதற்குள் துப்பாக்கியால் அவரை சுட்டத்தில் நெஞ்சில் குண்டு பாய்ந்து கருப்பசாமி சரிந்தார். தடுக்கச் சென்ற சிவக்குமார், சிவகாமி ஆகியோருக்கும் கையில் துப்பாக்கியால் சுட்டதில் காயம் ஏற்பட்டது. அவர்கள் சத்தம் போட கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பினார்கள்.
இதில், கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். தாய், மகன் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் அப்போது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மிலிட்டரி காலனியை சேர்ந்த சலீம் (எ) சையத் சலீம்(45) என்பவரை கைது செய்தனர். இவர் முன்னாள் ராணுவ வீரர்.
விசாரணையில் சலீம், ராணுவத்தில் பணியாற்றியபோது தனது நண்பர்களாக இருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அஷ்வின்குமார், மேற்கு வங்கத்தை சேர்ந்த நாராயணதாஸ் ஆகியோருடன் சேர்ந்து, தொழிலதிபர் சிவக்குமார் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்தபோது கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டு தப்பியது தெரியவந்தது. இவர்களில் அஷ்வின்குமார், நாராணயதாஸ் தலைமறைவானார்கள்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதம், ஆயுதம் பயன்படுத்தி குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், 2 பேரை கொலை முயற்சி செய்த குற்றத்துக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், கொலை செய்ய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் ஆகியவற்றை ஏக காலத்தில் சலீம் அனுபவிக்க நீதிபதி பத்மா தீர்ப்பளித்தார்.