
பாமகவில் உள்கட்சிப் பூசல் சமீபகாலமாக உச்சத்தை தொட்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தனை பாமக இளைஞரணித் தலைவராக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு மேடையிலேயே பாமக தலைவர் அன்புமணி மறுப்பு தெரிவிக்க, அதுவரை உள்கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த பிரச்னை வெட்ட வெளிச்சமானது.
இதையடுத்து, அதே மாதம் அன்புமணி ராமதாஸை சந்தித்தார். இருவருக்கு இடையேயும் சமரசம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த மே 10-ம் தேதி நடந்த பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டை முழுவதுமாக அன்புமணி தான் முன் நின்று ஏற்பாடுகளை செய்தார். ஆனால், அந்த மாநாட்டின் மேடையில் ராமதாஸும், அன்புமணியும் நேருக்கு நேர் முகத்தைக் கூட பார்த்துகொள்ளவில்லை.
மே 29-ம் தேதி, முகுந்தன் தனது இளைஞரணித் தலைவர் பதவியின் ராஜினாமா கடிதத்தை அன்புமணியிடம் வழங்கினார். அன்றே செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘வளர்த்த கிடா மார்ப்பில் எட்டி உதைத்தது… அன்புமணிக்கு எம்.பி பதவி வாங்கி தந்திருக்கக் கூடாது” என்று ஏகப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கையெடுத்து கும்பிட்டபடி..!
இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்த அன்புமணி தருமபுரியில் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மறைந்த கனல் இராமலிங்கம் படத் திறப்புவிழாக் கூட்டத்தில், ‘நானே தலைவர்’ என்று சென்னை சோழிங்கநல்லூரில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில், இன்று பாமக நிறுவனர் மற்றும் தனது தந்தையுமான ராமதாஸை சந்திக்க சென்ற அன்புமணி தைலாபுரத்திற்கு சென்றார். இருவருக்கும் இடையே 45 நிமிட பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. பின்னர், எதுவுமே பேசாமல் அன்புமணி கிளம்பி விட்டார். என்ன நடந்தது என அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கார் கண்ணாடியை கூட திறக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி அன்புமணி சென்றார் .
இதனையடுத்து, ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமியும் ராமதாஸை சந்தித்து பேசி வருகின்றனர்.
பாஜக – பாமக கூட்டணியை ராமதாஸ் அவ்வளவாக விரும்பவில்லை. அன்புமணி பாஜக் கூட்டணியை விரும்புகிறார். தற்போது அதிமுகவும் பாஜக வும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமதாஸை சமாதனப்படுத்தி பாமகவை மெகா கூட்டணியில் ஐக்கியப் படுத்தவே பாஜக பக்கம் பேச குருமூர்த்தியும், அதிமுக சார்பில் பேச துரைசாமியும் பேசி வருகின்றனர் என்கிறார்கள்..
‘அடுத்து என்ன நடக்கும்?’ என்ற பரபரப்பு தற்போது கூடியுள்ளது.