
ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்சிபி அணி வீரர்களைப் பார்க்க சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் புதன்கிழமை மாலை குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் உடல்நசுங்கி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் விவேகானந்தா வித்யாலயா என்ற தனியார் பள்ளியை நடத்தி வருபவர் மூர்த்தி. இவரது மகள் காமாட்சி (28). கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆர்சிபி அணியின் தீவிர ரசிகையான இவரும் புதன்கிழமை நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அதில், கூட்ட நெரிசல் காரணமாக மேடை உடைந்ததில் காமாட்சி கீழே விழுந்துள்ளார். அப்போது, ஏற்பட்ட நெரிசலில் மற்றவர்கள் மிதித்ததில் காமாட்சி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், வேலைக்குச் சென்ற இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் காமாட்சி உயிரிழந்தது உடுமலைப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.