
Doctor Vikatan: என் வயது 36. என்னுடைய வேலையின் தன்மை காரணமாக என்னால் தினமும் மூன்று வேளைகளும் வீட்டுச் சாப்பாடு சாப்பிட முடியாது. பெரும்பாலும் வேலை நிமித்தம் வெளியே செல்லும் இடங்களில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுவேன். அடிக்கடி வெளி உணவுகளைச் சாப்பிடுவோர், குடலை எளிதாகச் சுத்தம் செய்யும் வழிகள் என இன்ஸ்டாவில் நிறைய ரீல்ஸ் பார்க்கிறேன். அவை எல்லாம் உதவுமா… வெளியிடங்களில் சாப்பிடும்போது சில நேரங்களில் உடனே வயிறு கலக்குகிறது. அதற்கு எளிமையான தீர்வு ஏதும் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி
ஹாஸ்டலில் தங்கியிருப்போர், வெளியே அலையும் வேலையில் இருப்போருக்கெல்லாம் தினமும் மூன்று வேளைகளும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது. தினமும் மூன்று வேளைகளுமே வெளியில் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களையும் பார்க்கிறோம்.
வெளி உணவுகளால் குடலில் சேரும் நச்சுகளையும் கழிவுகளையும் அகற்ற மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என எதுவும் கிடையாது. இன்ஸ்டா ரீல்ஸில் நீங்கள் பார்க்கிற விஷயங்களை எல்லாம் அப்படியே நம்பி பின்பற்றுவது ஆபத்தானது.
வாரத்தில் ஒரு நாள் நீங்கள் பின்பற்றக்கூடிய எளிய சித்த மருத்துவம் ஒன்று உள்ளது. சித்த மருந்துக் கடைகளில் சுண்டைவற்றல் சூரணம் என கிடைக்கும். மார்க்கெட்டிங் வேலையில் இருப்போர், வெளியே சாப்பிட வேண்டிய நிர்பந்தத்தில் இருப்போரெல்லாம் இந்தச் சூரணத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம். இதை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் அல்லது நீர்மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.

சுண்டை வற்றலை பலரும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. உண்மையில், குடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் சுண்டை வற்றலுக்கு நிகரே இல்லை எனலாம். சுண்டை வற்றல் இருந்தால் கையில் தங்கம் இருப்பதற்குச் சமம்.
உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கெட்ட பாக்டீரியாக்களின் அளவைக் குறைக்கும் தன்மை சுண்டை வற்றலுக்கு உண்டு. கிராமங்களில் வாரம் முழுக்க சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என சாப்பிட்டாலும், வார இறுதியில் சுண்டை வற்றலைச் சேர்த்துக் குழம்பாகச் செய்து சாப்பிடுவார்கள். அப்பளம் பொரிப்பது போல சுண்டை வற்றலைப் பொரித்து, பொடித்து, சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து வாரம் ஒருநாள் சாப்பிட்டால்கூட குடல் சுத்தமாகிவிடும்.
குடலை உணவுகள் மூலம்தான் சுத்தப்படுத்த முடியும். டீடாக்ஸ் சிகிச்சைகள் எல்லாம் தேவையே இல்லை. சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டிய உணர்வு வரும். அந்தப் பிரச்னைக்கும் சுண்டைவற்றல் சூரணம் சூப்பர் மருந்தாகச் செயல்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.