
புதுடெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முழுவதும் விற்றுத் தீர்வதன் பின்னணியில் உள்ள மோசடியை ரயில்வே கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்வதற்கு, ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
எனினும், ஒவ்வொரு ரயிலுக்கும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக பண்டிகைகள், விடுமுறை நாட்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தீர்ந்துவிடும். இத்தனைக்கும் பண்டிகைக்காக 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கும். அப்போதும் கூட டிக்கெட்டுகள் மளமளவென விற்று விடும். இதுகுறித்து நிறைய புகார்கள் ரயில்வேக்கு வந்த வண்ணம் இருந்தன.