
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் போடூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(40). கண்ணூரில் பிரபலமான கெய்றோஸ் ரூப் அண்ட் செராமிக் டிஸ்டிபியூட்டர் கம்பெனியின் உரிமையாளர் ஆவார். இவரது மனைவி ரம்யா(37).
இவர்களுக்கு எட்டு மகள்கள், இரண்டு மகன்கள் என மொத்தம் 10 குழந்தைகள் உள்ளார். மூத்த மகள் ஆல்பியா லிஸ்பத் கொட்டியூர் ஐ.ஜே.எம் பள்ளியில் +2 படிக்கிறாள்.
இரண்டாவது மகள் ஆக்னஸ் மரியா பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஆன்கெல்லரின் எட்டாம் வகுப்பும், நான்காவது மகள் ஆஸின் தெரேஸ் ஆறாம் வகுப்பிலும், ஐந்தாவது மகன் லியோ டோம் நான்காம் வகுப்பிலும், ஆறாவது மகன் லெவின்ஸ் ஆன்றணி இரண்டாம் வகுப்பும், ஏழாவது மகள் கேதரின் ஜோக்கிமா யு.கே.ஜி, எட்டாவது மகள் ஜியோவானா மரியா, ஒன்பதாவது மகள் ஜியன்னா ஜோஸ்பின் ஆகியோர் வீட்டுக்கு அருகில் உள்ள அங்கன்வாடியில் படிக்கின்றனர்.
எட்டு மற்றும் ஒன்பதாவது மகள்கள் இருவரும் இரட்டை குழந்தைகளாவார்கள். பத்தாவது குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது.
குழந்தைகளின் தாய் ரம்யாவும், பாட்டி ஏலிக்குட்டி ஆகியோர் பள்ளிக்கூடம் திறந்தால் அதிகாலை 5 மணிக்கு எழுந்து சமையல் அறைக்குச் சென்று குழந்தைகளுக்கான உணவு சமைக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இவர்கள் தங்களுக்கு உதவியாக சத்திஸ்கரைச் சேர்ந்த அஞ்சிதா என்பவரை வேலைக்கு நியமித்துள்ளனர். காலை 7 மணிக்கு அனைவருக்கும் காலை உணவும், குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்களில் மதிய உணவும் தயார் செய்து வைத்துவிடுவார்கள்.
பின்னர் குழந்தைகளுக்கு சீருடை அணிவித்து தயாராக்குவார்கள். இளைய குழந்தைகளின் புத்தக பை ஆகியவற்றை மூத்த பிள்ளைகள் அடுக்கி தயாராக்கி கொடுப்பார்கள். காலை 8.30 மணிக்கு ஸ்கூல் பஸ் வந்ததும் குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டுவிடுவார்கள். அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகளை வேலைக்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சிதா அழைத்துச் செல்வார்.

“கடவுள் தந்த வரத்தை வேண்டாம் என்று சொல்வது பாவமாகும்” – தாய் ரம்யா
இதுபற்றி குழந்தைகளின் தாய் ரம்யா கூறுகையில், “முதல் மூன்று குழந்தைகளும் நார்மல் டெலிவரி மற்ற குழந்தைகள் அனைவரும் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள். சிலர் எங்கள் குடும்பத்தை பார்த்து ‘இவ்வளவு குழந்தைகளா’ என புருவம் உயர்த்துவார்கள். அவர்களை புன்னகையுடன் எதிர்கொண்டு கடவுள் தந்த வரத்தை வேண்டாம் என்று சொல்வது பாவமாகும் எனவும், குழந்தைகள் அதிகரிப்பது போன்று எங்கள் பிசினஸும் வளர்ந்து வருகிறது எனவும் கூறி புரிய வைப்போம்.
குழந்தைகளை வளர்ப்பதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. என் கணவர் சந்தோஷ் உடன் பிறந்தவர்கள் 4 பேர். என் சகோதரனுக்கு 5 குழந்தைகள் உள்ளன. எங்கள் குழந்தைகளும் ஒன்றாக ஸ்கூலுக்கு போவதை பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கும்” என்றார்.
இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும் குழந்தை அடுத்த ஆண்டு கல்லூரிக்கு சென்றுவிடுவார். எனவே ரம்யாவின் 9 குழந்தைள் ஒரே சமயத்தில் செல்லும் காட்சியை இந்த ஆண்டுதான் பார்க்க முடியும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறி சிலாகிக்கின்றனர்.