
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள விஜயாபுரா அருகே கனரா வங்கியில் ரூ.53 கோடி மதிப்பிலான 59 கிலோ தங்க நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விஜயாபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமன் நிம்பர்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜயாபுரா மாவட்டத்தில் உள்ள மனகுலியில் இயங்கிவந்த கனரா வங்கியில் கடந்த மே 25-ம் தேதி இரவு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடிப்பதற்கு முன்பாக மாந்திரீக பூஜை செய்துள்ளனர். பின்னர் லாக்கர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை மட்டும் கள்ள சாவி கொண்டு திறந்துள்ளனர்.