
நடிகர் கமல்ஹாசனும் மணிரத்னமும் 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் 'தக் லைஃப்'. இதில் சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படம் இன்று (ஜூன் 5) வெளியாகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:தமிழ் சினிமாவை புரட்டிப் போட வேண்டும் என்பதுதான் எங்களின் ரொம்ப நாள் ஆசை. அதைசெய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். புரட்டிப் போடுவது என்பது பெரிய விஷயம். நாங்கள் விரும்பும் திசை நோக்கி கொஞ்சமாவது நகர்த்தலாம் என்று நினைத்தோம். அதற்கு எங்களுக்குசிறந்த வீரர்கள் கிடைத்தார்கள். சர்வதேச தரத்தில்இருக்கும் எங்கள் டெக்னீஷியன்களின் வேலையை, வெளிநாட்டில் இருந்து வந்து பணியாற்றியவர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.
நான் அப்போது பார்த்த இளைஞர் மணிரத்னம், இன்று சினிமா ஞானியாக மாறியிருக்கிறார். அவர் படத்தில் நடித்தது எனக்கு குதூகலமாக இருந்தது என்பதுதான் உண்மை. இதில் சிறந்த டெக்னீஷியன்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இப்போது அமெரிக்காவில் படம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டியவர். இருபது வருடத்துக்கு முன் ‘மருதநாயகம்’ படத்தை அவருடன் தொடங்கினேன். அதிலிருந்ததை விட இன்னும் சிறந்த ஒளிப்பதிவாளராக இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறார். அவர் பணியை விமர்சகர்கள் பேசுவார்கள். நானும் சினிமா ரசிகன்தான். சினிமா விமர்சகன்தான். சினிமாவில் வியாபாரமும் வேண்டும்தான். ஆனால் சினிமாவும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். இதில் சிறிய பாத்திரத்தில் நடித்தவர்கள் கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மணிரத்னத்துடன் பணியாற்ற வேண்டும் என்றுதான் பாதி பேர் இந்தப் படத்துக்குள் வந்தார்கள். சம்பளம் இரண்டாம் பட்சம்தான். எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ் நாட்டுக்கு நன்றி. நான் மேடையில் பேசும்போது, உயிரே, உறவே, தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தையும் முழுமையாக உணர்கிறேன்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.