
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர். எம்.ஜி.சாலை, சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை மறித்து சாலையில் ஆட்டம் போட்ட ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.பெலகாவியில் நடனமாடிய‌ மஞ்சுநாத் கும்பார் (28) என்ற ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷிமோகாவில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற அபினந்தன் (21) என்ற ரசிகர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.