• June 4, 2025
  • NewsEditor
  • 0

ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி அணி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.

இதனால், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிய பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

முறையான திட்டமிடல் இன்றி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ததே இந்த சோக சம்பவத்துக்கு காரணம் என்று மாநில அரசின் மீதும், அணி நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சித்தராமையா, “வெற்றி கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியத்தின் அருகில் பெரிய துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இத்தகைய துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இச்சம்பவத்துக்கு அரசாங்கம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்டேடியத்தின் கதவுகளை மக்கள் உடைத்தனர். இவ்வளவு பெரிய கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஸ்டேடியத்தில் 35,000 பேர் மட்டுமே இருக்க முடியும். ஆனால், இரண்டு மூன்று லட்சம் பேர் வந்தனர்.

நெரிசலில் மொத்தம் 11 பேர் இறந்தனர், 33 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும்.

இந்த சம்பவத்தை நான் சமாளிக்க விரும்பவில்லை. எங்கள் அரசாங்கம் இதில் அரசியல் செய்யாது. 15 நாள்கள் அவகாசம் அளித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

மேலும், எக்ஸ் தளத்தில் சித்தராமையா, “சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கொண்டாட்டத்தின் தருணத்தை துக்கம் மறைத்துவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

வெற்றிப் பேரணிக்கு அனுமதி தராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஸ்டேடியதுக்கு அருகில் குவிந்த மக்கள் கூட்டம் இந்தத் துயர சம்பவத்திற்கு வழிவகுத்தது.

உற்சாகம், கொண்டாட்டம் ஆகியவற்றை விட எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த புகைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் ஷேர் செய்த்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *