
புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஏற்பட்ட தகராறு காரணமாக தினேஷ்குமார் நண்பர்கள் ஒன்று சேர்ந்து, முகிலனை மதுபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், புதுக்குளம் அருகில் உள்ள காலாகுளம் கரையில் தனியாக வந்த தினேஷ்குமாரை மறித்த முகிலன் அரிவாளால் வெட்டி குளத்திற்குள் தள்ளியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்து குளத்திற்குள் விழுந்த தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் குளத்திற்குள் கிடந்த தினேஷ்குமாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் குறித்து கணேஷ் நகர் காவல் துறையினர் முகிலன் மற்றும் அவரது கூட்டாளிகளான ரமேஷ் அரவிந்த், ஜெய சுமன், சஞ்சய், கலை, விஜய் என்ற கூலன் விஜய், தீபன் என்ற தீபன் ராஜ், பவி உள்ளிட்ட 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.