• June 4, 2025
  • NewsEditor
  • 0

ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் கோப்பையை வென்றதற்கு, இன்று மாலை ஆர்.சி.பி வீரர்களை நேரில் அழைத்து சிறப்பிக்க அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேபோல், மாநில கிரிக்கெட் சங்கமும் ஆர்.சி.பி வீரர்களை கவுரவிக்க சின்னசாமி ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிட்டது.

அதன்படி, இன்று மாலை பெங்களூரு விமான நிலையம் வந்திறங்கிய ஆர்.சி.பி வீரர்களை துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் நேரில் வரவேற்றார். இதற்கிடையில், சட்டமன்றத்துக்கு அருகில் சாலைகளிலும், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியேயும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழப்புகள் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. இந்த நிலையில், உயிரிழப்புகள் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த சம்பவம் தெரியவரவே, சட்டமன்றத்தில் ஆர்.சி.பி வீரர்களுக்கு நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சி சில நிமிடங்களிலேயே முடிக்கப்பட்டது.

கூட்ட நெரிசல் குறித்து பேசிய சிவக்குமார், “கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசல். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் உட்பட 5,000-க்கும் மேற்பட்டோரை ஏற்பாடு செய்தோம். ஆனால், இளைஞர்கள் கூட்டம் என்பதால், அவர்கள் மீது தடியடி நடத்த முடியாது” என்று கூறினார்.

மேலும் உயிரிழப்பு சம்பவம் குறித்து பேசிய சிவக்குமார், “போலீஸ் கமிஷனர் உட்பட அனைவரிடமும் நான் பேசினேன்.

பாதிக்கப்பட்டவர்களை கவனித்துவரும் மருத்துவர்களை தொந்தரவு செய்ய விரும்பாததல், மருத்துவமனைக்கு நான் பின்னர் செல்வேன்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்.” என்று கூறினார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *