
கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது: 41). இவர், கரூரில் உள்ள ஒரு பலகாரக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (வயது: 35). அதேபோல், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது: 35). இவர், ரமேஷ் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். பக்கத்து வீடு என்பதால் சிவக்குமாருக்கும், அம்சாவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. அதன்பின்னர், அந்த பழக்கம் நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியது. இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது வீட்டில் மனைவி அம்சாவுடன், சிவக்குமார் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து ரமேஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை தட்டிக் கேட்டபோது, சிவக்குமாருக்கும், ரமேஸூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அது வாக்குவாதமாகியது. இதில், ஆத்திரமடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து சிவக்குமாரின் தலை மற்றும் பல இடங்களில் தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து, ரமேஸை கைது செய்தனர். மனைவியோடு திருமணம் மீறிய உறவில் இருந்தவரை இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.