
சென்னை: மின்தடை காரணமாக ஆவடி மையத்தி்ல் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு எழுதிய 13 மாணவர்கள், குன்றத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்கள் உள்ளிட்ட பலர், ‘மின்தடையால் தங்களால் நீட் தேர்வை மனநிறைவுடன் எழுத முடியவில்லை. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சரியான பதிலை தேர்வு செய்ய முடியவில்லை. எனவே மறுதேர்வு நடத்தும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது’ என வழக்கு தொடர்ந்திருந்தனர்.