
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீப காலமாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் போர்க்கப்பல்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பஞ்சாப்பில் ஒரு யூடியூப்பர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜஸ்பிர் சிங் என்ற அந்த நபர் பஞ்சாப்பின் ரூப்நகரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நடத்தும் ஜான்மகால் வீடியோ என்ற யூடியூப் சேனலில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இது குறித்து பஞ்சாப் டிஜிபி கெளரவ் யாதவ் கூறுகையில், ”ஜஸ்பிர் சிங் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்த சாகிர் என்பவரை தொடர்பு கொண்டு இந்தியாவில் உளவு பார்த்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஏற்கெனவே பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண் யூடியூப்பர் ஜோதி மல்ஹோத்ராவிற்கு மிகவும் நெருக்கமானவரான ஜஸ்பிர் சிங், பாகிஸ்தான் தூதர அதிகாரி டேனீஷ் என்பவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிர் சிங்கும் பாகிஸ்தானுக்கு 3 முறை சென்று வந்துள்ளார். பாகிஸ்தானுக்கு சென்றபோது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அதோடு அவரது மொபைல் போனில் பல பாகிஸ்தான் நம்பர்கள் இருக்கிறது. அந்த நம்பர்களை ஆய்வு செய்து வருகிறோம். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த பாகிஸ்தான் தேசிய தினத்திலும் ஜஸ்பிர் சிங் பங்கேற்றுள்ளார்.

ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டவுடன் தான் பிடிபடுவதை தவிர்க்கும் வகையில் ஜஸ்பிர் சிங் பாகிஸ்தான் தொடர்புகளை அழிக்க முயற்சி செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஆப்ரேசன் சிந்தூரின் போது ராணுவ நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாக பஞ்சாப்பில் தரன் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.