
கேரளாவைச் சேர்ந்த சங்கு என்ற சிறுவன் அங்கன்வாடிகளில் பிரியாணி வழங்க வேண்டும் எனப் பேசும் வீடியோ ஒன்று கடந்த ஆண்டு வைரலானது.
கேரள பெண்கள், குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அப்போது அதற்குப் பதிலளித்துப் பேசும்போது, “இப்போது முட்டையும் பாலும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றன. சிறுவனின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் புதிய கல்வி ஆண்டுக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. அதில் அங்கன்வாடி மையங்களில் முட்டை பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒட்டுமொத்த மெனுவும் மாற்றப்பட்டுள்ளது. உப்பு மற்றும் சீனி குறைவாகப் பயன்படுத்தும் வகையில் அந்த மெனு அமைக்கப்பட்டுள்ளது.
அதில் திங்கள்கிழமை காலையில் பால், கொழுக்கட்டை அல்லது இலை அப்பம். மதியம் சோறு, சிறுபயறு குழம்பு, முருங்கை கீரை, பொரியல் ஆகியவையும்.
பொது உணவாகப் பருப்பு பாயசமும் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை காலை உணவாக நியூட்ரீசியன் லட்டு, மதியம் முட்டை பிரியாணி அல்லது முட்டை புலாவ், பழங்கள், பொது உணவாக ராகி அடையும் வழங்கப்படும்.
புதன்கிழமை காலை கொழுக்கட்டை அல்லது இலை அப்பத்துடன் கடலை மிட்டாயும் வழங்கப்படும். மதியம் பயிறு கஞ்சி, கிழங்கு கூட்டுக்கறி, வறுத்த சோயா. பொது உணவாக இட்லி, சாம்பார், புட்டு, பச்சை கடலை கறி.

வியாழன் காலை பால், அரிசி அடை அல்லது இலை அப்பம். மதியம் சோறு, முளைக்கட்டிய பயிறு, கீரை, சாம்பார், முட்டை அம்லெட் வழங்கப்படும்.
பொது உணவாகப் பழம், சர்க்கரை கலந்த அவல் வழங்கப்படும். வெள்ளிக்கிழமை காலை பால், கொழுக்கட்டை. மதியம் சோறு, சிறுபயறு கறி, அவியல் கூட்டு, முருங்கை கீரை பொரியலும், பொது உணவாக உடைத்த கோதுமை புலாவ் வழங்கப்படும்.
சனிக்கிழமை காலையில் நியூட்ரீ லட்டு, மதியம் வெஜிட்டபிள் புலாவ், முட்டை, பொது உணவாகத் தானிய பாயசம் வழங்கப்படும் வகையில் மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டாவில் நடந்த அங்கன்வாடி மையங்களில் இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் அமைச்சர் வீணா ஜார்ஜ் பேசுகையில், “சங்கு என்ற சிறுவன் அங்கன்வாடி மையங்களில் உப்புமாவுக்குப் பதில் பிரியாணியும் சிக்கன் ப்ரையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த வீடியோ வைரல் ஆகியிருந்தது.
அப்போதே அந்தச் சிறுவன் பயின்ற அங்கன்வாடியிலும், வேறு சில அங்கன்வாடிகளிலும் பிரியாணி வழங்கப்பட்டன. முன்பு வாரத்திற்கு இரண்டு முறை அங்கன்வாடி மையங்களில் முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது வாரத்துக்கு மூன்று முறை முட்டை வழங்கப்பட்டு வருகின்றன.

சிறிய குழந்தைகள் என்பதால் இறைச்சி உணவுகள் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன. எனவே அங்கன்வாடிகளில் முட்டை பயன்படுத்தி முட்டை பிரியாணி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிக சீனி மற்றும் அதிகமான கொழுப்புகள் இல்லாமல் சத்தான உணவுகளை அங்கன்வாடி மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.