
ஆப்பிரிக்கா அதன் புதிய நம்பிக்கை ஒளியைக் கண்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவரான இப்ராஹிம் டிராரே தான் அந்த வெளிச்சம்.
37 வயதாகும் இவர் புர்கினா ஃபெசோ ராணுவ ஆட்சிக்குழுவின் தலைவராக இருக்கிறார். மேற்கு நாடுகளின் சுரண்டலுக்கு ஆளாகி, உலகிடம் கையேந்தியே நிற்கும் ஆப்பிரிக்காவின் தலை விதியை இவரது கொள்கைகள் திருத்தி எழுதுகின்றன.
ஆப்பிரிக்காவில் நிலவும் நவ-காலனித்துவம் (Neo-Colonialism in Africa)
இயற்கையில் மிகவும் வளமான கண்டம் ஆப்பிரிக்கா. தங்கம், வைரம், எண்ணெய் மட்டுமல்லாமல் இன்று நாம் தினசரி பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருள்களில் உள்ள கோபால்ட், லித்தியம் மற்றும் பல கனிமங்கள் ஆப்பிரிக்காவில் இருந்துதான் கிடைக்கின்றன.
ஆனால் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் உலகின் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் இருக்கின்றன. மகிழ்ச்சிக்கான, வளர்ச்சிக்கான, வேலை வாய்ப்புக்கான என எந்த பட்டியலை எடுத்தாலும் அதில் ஆப்பிரிக்க நாடுகள் பின்தங்கி இருக்கின்றன.
இதற்கு காரணம் வெளிநாட்டு சக்திகளும், பன்னாட்டு நிறுவனங்களும்தான். ஆப்பிரிக்காவின் ஒட்டு மொத்த சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் 90% வெளிநாடுகளுக்கே செல்கிறது.
கொஞ்சம் வளரும் நாடுகளில் சாலை அமைப்பது, பாலம் கட்டுவது உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களே செய்கின்றன. இவை உள்நாட்டு மக்களுக்கு சரியான வேலை வாய்ப்புகளைக் கூட வழங்குவதில்லை.
காலனியத்துவ காலத்தில் நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்கா உறிஞ்சி எடுக்கப்பட்டது. அந்த கண்டத்தின் இன்றைய நிலைக்கு காரணம் நவ-காலனித்துவம்.
ஆப்பிரிக்காவை பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக மேற்குலக நாடுங்கள் தங்கள் கட்டுப்பாட்டிலே வைத்திருக்கின்றன.
உதாரணமாக பிரான்ஸின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த 14 நாடுகள் இன்றும் காலனிய வரி செலுத்துகின்றன. மேலும் அவை, CFA பிராங்க் என்ற நாணயத்தைப் பயன்படுத்துகின்றன. இது யூரோவுடன் நிலையான இணைக்கப்பட்ட மதிப்பைக் கொண்டிருக்கும் (சீர் திருத்தத்துக்கு முன்பு பிரான்ஸின் பிராங் நாணயத்துடன் இணைக்கப்பட்டிருந்தது). 1 யூரோ = 655.957 CFA.
அந்த நாடுகளால் மற்ற நாடுகளைப் போல எளிதாக ஐரோப்பா அல்லாத நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்றபடி, வட்டி விகிதங்களை மாற்றவோ, நாணய மதிப்பைக் குறைக்கவோ முடியாது.

Africa
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்காக BCEAO, மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்காக CEMAC என இரண்டு மத்திய வங்கிகளை பிரான்ஸ் நடத்துகிறது. இவை குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்துகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக CFA பிராங்க் நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகள், தங்கள் பணத்தை யூரோவாகவோ அல்லது பிறநாடுகளின் நாணயமாகவோ மாற்றுவதற்கான உத்தரவாதத்தை பிரான்ஸ் அளிக்கிறது.
இதனால் CFA பயன்படுத்தும் நாடுகளில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் எளிதாக இருக்கும் ஆனால், இந்த நாடுகள் தங்கள் அந்நிய செல்வாணி கையிருப்பில் 50% பிரான்ஸ் கருவூலத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது (2019க்கும் முன்பு இது 100% ஆக இருந்தது).
இந்தனால் இந்த 50% பணத்தை உள்நாட்டு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அத்துடன் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு பிரான்ஸ் வட்டியும் பெறுகிறது. இதன்மூலம் மறைமுகமாக இந்த நாடுகளின் நாணயக் கொள்கையை பிரான்ஸ் கட்டுப்படுத்துகிறது. இது அவற்றின் இறையாண்மையைத் திருடும் செயல். இது ஓர் உதாரணம்தான் இதுபோன்ற காலனித்துவ நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்கிறார் புர்கினா ஃபெசோவின் தலைவர், உண்மையான ஆப்பிரிக்க சுதந்திரத்தைக் கோரும் இப்ராஹிம் டிராரே.
இப்ராஹிம் டிராரே
புர்கினா ஃபெசோ ஒரு புரட்சிகரமான ராணுவ தலைமையைப் பெறுவது இதுமுதன்முறை அல்ல. 1980-களில் மேற்கு நாடுகளின் சுரண்டல்களுக்கு எதிராக செயல்பட்ட மார்சிஸ்ட் தலைவர், ஆப்பிரிக்காவின் சேகுவாரா என அழைக்கப்பட்ட தாமஸ் சங்கராவின் வழிகளை இப்ராஹிம் டிராரே பின்பற்றுகிறார்.
1988-ம் ஆண்டு பாண்டோகுய் பகுதியில் உள்ள கேராவில் பிறந்தார். ஔகடௌ பல்கலைக்கழக்கத்தில் புவியியல் படித்தவர் மாணவர் அமைப்புகளில் சுறுசுறுப்பாக இயங்கிவந்தார்.
முஸ்லிம் மாணவர் சங்கத்தில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், புர்கினா பாசோவின் மார்க்சிஸ்ட் தேசிய மாணவர் சங்கத்தின் பிரதநிதியாக வளர்ந்தார்.
படித்து முடித்தபிறகு 2009 புர்கினாபே ராணுவத்தில் இணைந்தார். 2012ம் ஆண்டு இரண்டாம் லெப்டினன்டாகவும், 2014 லெப்டினண்டாகவும் பதவி உயர்வு பெற்றார்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைந்தார். மாலியில் பணியில் இருந்தபோது ஜிகாதி குழுக்களின் விமான தாக்குதலில் துணிச்சலாக செயல்பட்டதற்காகப் பாராட்டப்பட்டார்.

பின்னர் புர்கினா ஃபெசோ திரும்பியவர், அரசுக்கு எதிரான ஜிஹாதி குழுக்களின் நடவடிக்கைகளை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். 2020ம் ஆண்டு கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
7 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த ஆயுத தாக்குதல்களைத் தடுக்க முடியாததால் ஜனவரி 2022-ல் புர்கினா ஃபசோ அரசுக்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை ஆதரித்தார் இப்ராஹிம்.
ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிக ஆட்சிக் கவிழ்ப்புகளைச் சந்தித்த நாடு `புர்கினா ஃபெசோ’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட, தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் மார்ச் 2022-ல் உச்சத்தை எட்டின. அப்போது கயா பகுதியில் ஒரு பீரங்கி படையைத் தலைமை தாங்கினார் இப்ராஹிம். ராணுவ அதிகாரிகள் ஆட்சியாளரான பால்-ஹென்றி சாண்டாகோ சாமிபாவின் மீது நம்பிக்கை இழந்தனர்.
செப்டம்பர் 2022, ஒரு படையைத் தலைமைத் தாங்கி சென்று, ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிபரானார் இப்ராஹிம் டிராரே.
ஒரு பாதை
2020-க்குப் பிறகு மாலி, கினியா, சாட் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் ஜிகாதி தாக்குதல்களைக் கட்டுப்படுத்தாத அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இணைந்தது புர்கினா ஃபெசோ.
7 ஆண்டுகள் சண்டையினால் வாழ்வாதாரங்களை இழந்த பல லட்சம் மக்கள் புதிய தலைமை மூலம் விடியலை எதிர்நோக்கி இருந்தனர். அவரது பதவியேற்புக்கு பல உலக அமைப்புகளும் மேற்குலக நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
அப்போதைய ஐ.நா-வின் அறிக்கை புர்கினா ஃபசோவின் 5% மக்கள் பட்டினியில் வாடுவதாக தெரிவித்திருந்தது. சில இடங்களில் பெண்களும் குழந்தைகளும் உணவின்றி இலைகளையும் உப்பையும் உண்டுவருவதாகக் கூறப்பட்டிருந்தது. சவால்கள் நிறைந்த அதிபர் பதவியைக் கைப்பற்றினார் இப்ராஹிம். அவற்றை சமாளிக்க ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்.
33 வயதில் ஆட்சிக்கு வந்த தாமஸ் சங்கரா, 4 ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரம், கல்வியை உயர்த்தினார். ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து மேற்குலகின் சுரண்டல்களை எதிர்க்க வேண்டும் என குரலெழுப்பினார். பிரான்ஸின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக சட்டங்களை வகுத்தார். ஆப்பிரிக்கா முழுவதும் ஒரு ஹீரோவாக உருவானார். ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதான் இருப்பதிலேயே கடினமான வழி. காலனி ஆதிக்கத்தை நேருக்கு நேராக எதிர்ப்பது. அதுவும் பல்வேறு அமைப்புகள் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தபோது. அந்த ஆபத்தான முடிவை எடுத்தார் இப்ராஹிம்.
இப்ராஹிம் செய்தது என்ன?
இப்ராஹிமின் மேற்குலக ஆதிக்க எதிர்ப்பு என்பது அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியிலும் வெளிப்படுகிறது. அவற்றில் முக்கியமானது பிப்ரவரி 2023-ல் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக முகாமிட்டிருந்த பிரஞ்சு ராணுவத்தை வெளியேற்றியதுதான்.
இத்துடன் நிற்காமல் மேற்குலகின் எதிரிகளாகப் பார்க்கப்படும் ரஷ்யா மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடன் கைகோர்க்கிறார் இப்ராஹிம். பிரதமர் மோடி தவறவிட்ட ரஷ்யாவின் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார் இப்ராஹிம்.
ரஷ்ய ஆப்பிரிக்கப் படைகள் இப்ராஹிம் டிராரேவின் அரசையும் மக்களையும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. உக்ரைன் போருக்கு நடுவே புர்கினா ஃபெசோவுக்கு பாதுகாப்பு வழங்குவது நெருக்கடியாக இருந்தாலும் ரஷ்யா இப்ராஹிமுக்கு ஆதரவளிப்பதில் உறுதியாகவே இருக்கிறது.
இவர் முதன்முதலாக பிரலமானது 2023 ரஷ்யா-ஆப்பிரிக்கா மாநாட்டில் அவரது பேச்சுக்காகத்தான். ஆப்பிரிக்க தலைவர்களை, “ஏகாதிபத்தியவாதிகள் கயிறால் கட்டுப்படுத்தப்படும் பொம்மையாக இருக்காதீர்கள்” என நேரடியாக விமர்சித்துப் பேசினார்.

ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் காலனித்துவம், அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த உரையால் எழுச்சி பெற்றனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்காவிலும், பிற காலனித்துவ நாடுகளிலும் அவரது பேச்சு இன்றுவரை பரவி வருகிறது.
பொருளாதார ரீதியாக `புர்கினா ஃபெசோ’ வரலாற்றிலேயே முதன்முறையாக அரசுக்கு சொந்தமான சுரங்க நிறுவனங்களை நிறுவியுள்ளார் இப்ராஹிம்.
ஆப்பிரிக்க வளங்களில் இருந்து கிடைக்கும் பொருளாதாரம் ஆப்பிரிக்க மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே இப்ராஹிம் டிராரேவின் கொள்கையாக இருக்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் புர்கினாவில் செயல்படுத்தப்படும் அவர்களது திட்டங்களில் 15% பங்குகளை அரசுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது ரஷ்ய நிறுவனமான நோர்ட்கோல்ட்க்கும் பொருந்தும்.
மேற்குல நாடுகளின் ஆய்வு உரிமத்தை ரத்து செய்துள்ளார். அவர்களின் பன்னாட்டு நிறுவனங்களின் தங்க சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கிறார். நாட்டுடைமை ஆக்குவதற்காக அதிகாரத்தை பயன்படுத்தாமல், அதற்கான பணத்தையும் கொடுத்திருக்கிறார்.
இப்ராஹிமின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, “போரினால் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பாதுகாப்பு ஆச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், 2025-ல் நாட்டின் பொருளாதாரம் வலுவடையவே செய்கிறது. உள்நாட்டு வருவாயை உயர்த்துவதிலும், பொது ஊதிய மசோதாவைக் கட்டுப்படுத்துவதிலும், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான செலவினங்களை அதிகரிப்பதிலும் “பாராட்டத்தக்க முன்னேற்றம்” அடைந்திருக்கிறது.” என சர்வதேச நாணய நிதியம் இவரைப் பாராட்டியது.
இதேப் போல அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலக வங்கியும் இப்ராஹிமின் ஆட்சியை பாராட்டியிருக்கிறது.
Africa முழுவதும் விரியும் செல்வாக்கு!
காலனித்துவ அடையாளங்களை முற்றிலுமாக ஒதுக்கும் இப்ராஹிம், வழக்கறிஞர்கள் பிரஞ்சு கலாச்சாரமான வெள்ளை சவரி வைப்பதை தடை செய்துள்ளார்.
பர்கினா ஃபெசோவைத் தொடர்ந்து அதன் கூட்டணி நாடுகளான மாலி மற்றும் நைஜரும் இப்ராஹிமின் வழியைப் பின்பற்றுகின்றன. கடந்த 2024 மார்ச்சில் நைஜர் அதன் எல்லைக்குள் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை அனுமதிக்கும் ஒப்பந்தங்களைத் திரும்பப் பெற்றது.
இதேப்போல செனகல் மற்றும் கோட் டி வார் நாடுகளும் தங்கள் எல்லையில் இருந்து மேற்குலக ராணுவம் வெளியேற அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இப்ராஹிம் ஆப்பிரிக்கா முழுமையாக விடுதலைப் பெறுவதற்கான எழுச்சியைத் தூண்டியிருக்கிறார் என அரசியல் நோக்கர்கள் புகழ்கின்றனர்.
நீண்ட காலமாக ஒவ்வொரு அரசியல் தலைவரும் கேட்கும், “இயற்கை வளம் நிறைந்த ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்” என்ற கேள்வியையே இப்ராஹிமும் கேட்கிறார். உரக்கக் கேட்கிறார்.
தாமஸ் சங்கரா கொல்லப்பட்ட பிறகு ஆட்சிக்கு வந்த தலைவர்கள் பிரான்ஸின் அடிவருடிகளாக இருந்தனர். அவரது முன்னெடுப்புகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டன. சங்கரா நிறுத்திய நிறுவனங்கள் ரயில்வே, சாலை, துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றன.
ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகள், கருப்பின மக்களை விலங்குகளுக்கு நிகராகவே கருதும் காலனிவாதிகளுக்கு சேவையாற்றியதன் விளைவாக மீண்டும் மீண்டும் விழுகின்றன ஆப்பிரிக்க நாடுகள்.

ஆப்பிரிக்கா எப்போதுமே ஒரு தலைவரை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த இடத்தை நிரப்புவதற்கு தகுதியான ஆள் போலவே முளைத்தெழுகிறார் இப்ராஹிம். இவர் மீது இதுவரை 19 கொலை முயற்சிகள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றில் சில ஆதாரப்பூர்வமற்றவை.
கானாவின் ஜனாதிபதி ஜான் மஹாமாவின் பதவியேற்பு விழாவில், 21 நாட்டு தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இப்ராஹிம் போர் சீருடை அணிந்து, தனது கைத்துப்பாக்கியுடன் வந்தபோது அரங்கம் அதிர்ந்த்து. ஆப்பிரிக்காவில் அவருடைய செல்வாக்கு ஆலமரம் போல கிளை பரப்பி வருவதற்கு அந்த நாள் சாட்சி.
இப்ராஹிம் ஒரு சர்வாதிகாரியா?
மேற்கத்திய அரசியல் அறிஞர்கள், புர்கினா ஃபெசோவின் இளம் மக்கள் தொகைதான் இப்ராஹிமின் பிரபலமாக காரணம் எனக் கூறுகின்றனர். அங்கு ஒரு குடிமகனின் சராசரி வயது 17.7.
போரினால் ஆன்மாவை இழந்த ஒரு நாட்டை, எப்படி உற்சாகமாக வைத்திருப்பது என்ற சூத்திரத்தையே அவர் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இப்ராஹிம் வைரலான தலைவராக உள்ளார். அவரது சாதனைகள் ரீல்களில் அவரது ஆதரவாளர்களால் பரப்பப்படுகின்றன.
ரிகானா, கெல்லி போன்ற கருப்பின கலைஞர்கள் இப்ராஹிம் ட்ரேரேவைப் புகழ்ந்து பாடுவதுபோல ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவும் உண்மைபோல பரப்பப்பட்டது.
ரஷ்ய ஊடகங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் இப்ராஹிமின் உரைகளைப் பரப்பி, அவரது பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குவதாக மேற்கத்திய விமர்சகர்கள் சாடுகின்றனர்.
இஸ்லாமிய குழுக்களின் நடவடிக்கைகளைக் கடுப்படுத்தியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும், ரஷ்யா புர்கினா ஃபெசோவில் உள்ள தங்க சுரங்கங்களைப் பெறுவதற்கே இவரது ஆட்சிக்கு படைகளை அனுப்பி பாதுகாப்பு வழங்குகிறது என அமெரிக்க அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இவரை, நவ-காலனிவாதிகளின் கைப்பாவையாக செயல்படும் சுயமாக அறிவித்துக்கொண்ட தலைவர் என விமர்சித்துள்ளார். அவர் நவ-காலனிவாதிகள் எனக் குறிப்பிடுவது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடனும் பாதுகாப்பும் வழங்கும் ரஷ்யா மற்றும் சீனாவை.

இப்ராஹிம் மேற்குலக பார்வையில் ஆப்பிரிக்காவின் கதைகள் சொல்லப்படுவதை முற்றிலுமாக எதிர்க்கிறார்.
புர்கினா ஃபசோவில் மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளார். குறிப்பாக 2025 பிப்ரவரியில் நாட்டின் ராணுவம் ஒரு கிராமத்தில் 237 குடிமக்களை கொலை செய்ததாக செய்தி வெளியிட்ட நிறுவங்களைத் தடை செய்துள்ளார்.
ஆப்பிரிக்கா முழுவதுமே ஜனநாயகத்துக்கு எதிரான கருத்துகள் நிலவுகின்றன. ராணுவ ஆட்சி கவிழ்ப்பின் மூலம் அதிபரான இப்ராஹிம் “ஜனநாயகத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் வளர்ச்சியைக் கொடுத்ததில்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும், தேர்தல்களில் மேற்கத்திய நாடுகள் எளிதாக செல்வாக்கு செலுத்த முடியும் என்பதையும் அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
CFA நாணயத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் இப்ராஹிம். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்காக தனியான நாணயத்தை உருவாக்கவும் திட்டமிட்டுவருகிறார்.
இவர், ஆப்பிரிக்காவின் மற்றொரு சர்வாதிகாரியா, அல்லது ஒரு மகத்தான தலைவரை மேற்கத்திய நாடுகள் ஒழித்துகட்டப் பார்க்கின்றனவா… என்ற கேள்விக்கு ஆம்/இல்லை என்ற பதில் கிடையாது.
எனினும் ஆப்பிரிக்காவை ஒன்றிணைக்கு வலு கொண்ட தலைவரான இப்ராஹிம், சுய பிம்பத்தைக் கட்டமைப்பதை விட ஆப்பிரிக்காவின் உண்மையான சுதந்திரத்தை மீட்டெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி, ஏழ்மையிலும், மோதல்களிலும் உழலும் மக்களுக்கு உண்மையான வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும்.