
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 29-ம் தேதி முதல் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.
இதன் விளைவாக, பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 21 மாவட்டங்களில் 2.57 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய இரவு நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் ஒரு குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று பராக் பள்ளத்தாக்கையும், அதன் முக்கிய நகரமான சில்சாரில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்டார். பிரதமர் மோடி முன்னதாகவே மாநிலத்தின் நிலைமை குறித்து விசாரித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நான் அவருக்குத் தெரிவித்தேன். விரைவான நிவாரணம், மீட்பு பணிகளுக்கு நிர்வாகத்தை முடுக்கிவிட்டிருக்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவுவோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க உறுதியுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் 511 நிவாரண முகாம்களில் 39,000 க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

மணிப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.64 லட்சமாக அதிகரித்திருக்கிறது. 3917 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அஸ்ஸம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் 5-ம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், அதன் பிறகு தீவிரம் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.