
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த சிறுவன் அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டுமென வீடியோ மூலம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு இனி அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
‘பிரியாணி தரணும்’ … கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் மழலை மொழியில் சிறுவன் ஒருவன், ‘பிரியாணி தரணும்’ எனச் சொல்வார். அதற்கு அவரது அம்மா, ‘எங்கே’ எனக் கேட்பர். “அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும் பொரிச்ச கோழியும் தரணும்” என சிறுவன் பதில் தந்திருப்பார். அதை வீடியோவாக பதிவு செய்த அவரது அம்மா சமூக வலைதளத்தில் பதிவிட, அது பலரது கவனத்தைப் பெற்றது. வைரல் வீடியோ அரசாங்கத்தின் பார்வை வரைச் சென்றது.