
புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உயிரிழப்பு எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ள நிலவரம் குறித்து, மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிவாரணப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
அசாம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. அங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் சாட்டன் எனும் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.