
‘பெங்களூரு சாம்பியன்…’
ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியிருந்தது. 18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி வெல்லும் முதல் கோப்பை இது. இந்தத் தொடரை விராட் கோலிக்காக வெல்ல வேண்டும் என பெங்களூரு அணி லட்சியம் கொண்டிருந்தது.
இந்நிலையில், பெங்களூரு அணி வெற்றிக் கோப்பையுடன் பெங்களூருவில் ரோடு ஷோ நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
‘கோலி நெகிழ்ச்சி!’
பெங்களூருவின் வெற்றி உறுதியான தருணத்திலேயே மகிழ்ச்சியில் கோலி ஆனந்த கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டார். வெற்றிக்குப் பிறகும் ரொம்பவே நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். ‘என்னுடைய இளமை, உச்சக்கட்ட ஆட்டம், அனுபவம் என எல்லாவற்றையும் இந்த அணிக்காக கொடுத்திருக்கிறேன். என்னுடைய இதயம் ஆன்மா எல்லாமே பெங்களூருவுக்குதான்.

என்னுடைய கரியரின் கடைசி நாள் வரைக்கும் இந்த அணிக்காக மட்டுமே ஆடுவேன்.’ எனக் கூறியிருந்தார். மேலும் பேசியவர், ‘கெய்லும் டீவில்லியர்ஸூம் இந்த அணிக்காக தங்களின் உயிரைக் கொடுத்து அர்ப்பணிப்போடு ஆடியிருக்கிறார்கள். இது அவர்களுக்குமான வெற்றிதான். அவர்களும் நாளை எங்களோடு பெங்களூரு வர வேண்டும்.’ என்றார்.

இந்நிலையில், பெங்களூரு அணி சார்பில் ரோடு ஷோ நடத்தவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். பெங்களூருவின் சட்டசபையிலிருந்து தொடங்கும் இந்த ரோடு ஷோ சின்னசாமி ஸ்டேடியத்தில் முடிவடைகிறது. மாலை 3:30 மணி முதல் ரோடு ஷோவை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.