
கர்நாடகா மாநிலம் விஜயபுர மாவட்டம் பசவனபாகேவாடியில் செயல்படுகிறது கனரா வங்கி. இந்த வங்கியில் 58 கிலோகிராம் மதிப்புள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் எட்டு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கி அதிகாரி தெரிவித்ததாவது, மே 23 மாலை ஊழியர்கள் வழக்கம் போல வங்கியைப் பூட்டிச் சென்றிருக்கின்றனர். மே 24, 25 (சனி – ஞாயிறு) விடுமுறை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது.
மே 26 அன்று, பியூன் வங்கியை சுத்தம் செய்ய வந்தபோது, ஷட்டர் பூட்டுகள் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டார். உடனடியாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சோதனையில், திருடர்கள் வங்கிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பொது மக்கள் வங்கி கடனுக்காக டெபாசிட் செய்த நகைகள் என்பதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியிருக்கும் நிலையில், சூனிய சடங்குகள் மூலமும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காவல்துறை, “குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமாக இயங்கி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று உறுதியளித்துள்ளது.