
பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தை தலைமையகமாகக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் செயல்பட்டபோது திருவட்டார் ஆதிகேச பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
இதற்கிடையே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கள் குலதெய்வமான ஸ்ரீபத்மநாபசுவாமி-க்கு திருவனந்தபுரத்தில் கோயில் அமைத்தனர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலின் வடிவத்திலேயே திருவனந்தபுரத்தில் பத்மநாசுவாமி கோயில் அமைக்கப்பட்டது. திருவட்டாறு கோயில் மூலவரான ஆதிகேசவ பெருமாள் 16008 சாளக்கிராமங்களைக் கொண்டு 41 மூலிகைகளின் கலவையிலான கடுசர்க்கரை யோகம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவட்டாறு கோயிலில் 22 அடி நீளத்தில் அனந்த சயனராக மூலவர் காட்சி அருளுகிறார்.
கோர்ட் வழிகாட்டுதல் படி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளை திறந்து பார்த்தபோது விலை மதிப்பெற்ற நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை அடுத்து கோயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி உலக பிரசித்திபெற்றார். இதையடுத்து கோயில் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் கோர்ட் வழிகாட்டுதல் படியே நடைபெற்று வருகின்றன.
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயில் திருப்பணிகள் தாமதமானது. 2021 முதல் பல கட்டங்களாக புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. இப்போது திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக கோயில் மேலாளர் ஸ்ரீகுமார் அறிவித்துள்ளார்.
கோயில் கருவறை மீது அமைக்கப்பட்டுள்ள மூன்று கும்பங்கள், ஒற்றக்கல் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கும்பம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது.

1750-ம் ஆண்டு மார்த்தாண்டவர்மா மகாராஜா ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பிறகு 275 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8-ம் தேதி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
கடந்த 2-ம் தேதி முதல் சுத்தி பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூன் 8-ம் தேதி காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் தொடங்கும். அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
275 ஆண்டுகளுக்குப்பிறகு ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.