
அழகு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முகம் மட்டுமே. அந்த முகத்தை அழகாகவும் பொலிவுடனும் காண்பிப்பதற்கு ஏராளமான கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்தது.
அந்த வேதிப்பொருள் சிலருக்கு முகத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, இயற்கையாக கிடைக்கும் சில மூலிகைகளைப் பயன்படுத்தி முகத்தை அழகுடனும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.
இவையனைத்தையும் விடுத்து, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட ஓர் ஆயுர்வேத அழகுக்குறிப்பை சொல்வதோடு, அதை தயாரிக்கும் முறையையும் சொல்லித்தருகிறார் தேனியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா.
க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்:
காய்ச்சாத பால், நவரா அரிசி மாவு, லாக்ஷா என்கிற கோல் அரக்கு, மஞ்சட்டி தூள் ((Manjistha), ஒரிஜினல் கஸ்தூரி மஞ்சள் தூள், பாலில் கலந்த குங்குமப்பூ.
செய்முறை:
நவரா அரிசி மாவு 2 ஸ்பூன், லாக்ஷா தூள் சிறிதளவு, கஸ்தூரி மஞ்சள் தூள் (எரிச்சல் ஏற்படலாம், அதனால் சிறிதளவு மட்டும் போதும்) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சுத்தமான வெள்ளைத்துணியில் பொட்டலமாகக் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், பசும்பால் எடுத்து நன்கு காய்ச்சி, அதில் கட்டி வைத்த பொட்டலத்தைப் போட்டு பாலைக் காய்ச்சிக்கொண்டே இருக்க வேண்டும்.
பொட்டலத்தில் உள்ள தூளின் நிறம் பாலில் இறங்கி, பாலின் நிறம் மாறும் அளவிற்கும், பால் சுண்டும் அளவிற்கும் நன்கு காய்ச்ச வேண்டும்.
தேவையென்றால், பாலில் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளலாம். சூடு தணிந்த பிறகு, பாலில் ஊறிய பொட்டலத்தைப் பிழிந்து, அதிலிருந்து எடுக்கப்படும் விழுதை (கிரீம்) முகத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரத்திற்குப் பின் முகத்தை நீரில் கழுவிக்கொள்ள வேண்டும்.

பிழிந்து எடுக்கப்பட்ட விழுதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நாள்தோறும் பயன்படுத்தலாம். இந்தக் கிரீம் முகத்திற்கு மட்டுமல்ல, உடலிலும் பூசிக்கொள்ளலாம். முகத்தை, உடலை மாசுமருவில்லாமல் கண்ணாடிப்போல மாற்றும் ஆயுர்வேத அழகுக்குறிப்பு இது. மசாஜ் செய்யும்போதும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த செய்முறை கடினமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள், விரைவில் செய்துகொள்ள எளிமையான இந்த ஆயுர்வேத அழகுக் குறிப்பைப் பின்பற்றலாம்.
மஞ்சட்டியை மஞ்சள் உரசும் கருங்கல்லின் மீது உரசி எடுக்க வேண்டும். அதனுடன் பாலில் ஊறவைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் களிம்பை முகத்தில் பூசி, நன்கு காயவைக்க வேண்டும். பின்னர், முகத்தை நீரில் அலசிக்கொள்ளலாம். முகம் பொலிவுடன் காணப்படும்.
இந்த அழகுக் குறிப்புகளை நாள்தோறும் பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்தவித பக்கவிளைவுகளும் வராது” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா.
இந்தக் கட்டுரையில் உள்ள செய்முறை வீடியோவை மேலே காணலாம்.