
சென்னை: தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், மாற்றுத் திறனாளி பிரதிநிதிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் துறைவாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்.29-ம் வரை நடைபெற்றது.
இந்த காலகட்டத்தில், நிதி மசோதாக்கள், கலைஞர் பல்கலைக்கழகம், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்குவது, கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.