
ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.
ஆட்டநாயகன் விருதை வென்ற க்ரூணால் பாண்ட்யா பேசுகையில், “நாங்கள் முதலில் பேட் செய்கையிலேயே எங்களுக்குத் தெரிந்துவிட்டது. எவ்வளவு மெதுவாக வீசுகிறோமோ அந்தளவுக்கு பேட்டர்களைத் திணறடிக்க முடியும் என தீர்மானித்தேன்.
அதனால்தான் வேகத்தை மாற்றி மாற்றி மெதுவாக வீசினேன். சூழல் என்ன அங்கே என்ன தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்படுவதுதான் என்னுடைய பலம் என்கிறேன்.
இது நல்ல பேட்டிங் பிட்ச்தான். ஆனால், கொஞ்சம் மெதுவாக வீசும்போது பேட்டர்கள் திணறுவார்கள். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு இன்னும் கொஞ்சம் சௌகரியம் இருந்தது.
நான் ஆர்சிபி அணியோடு இணைந்தபோது, ‘எனக்கு கோப்பைகளை வெல்வது பிடிக்கும்.’ என்றேன். இப்போது மூன்றரை மாதம் கழித்து நான் சொன்னது நடந்துவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளின் இது எனக்கு நான்காவது கோப்பை. ஹர்திக்குடன் போனில் பேசினேன். பாண்ட்யாக்களின் வீட்டில் 11 ஆண்டுகளில் 9 ஐ.பி.எல் கோப்பைகள் இருக்கிறது என்றேன்.” என நெகிழ்ச்சியாகப் பேசினார்.