
ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு உணர்ச்சிப்பூர்வமான தருணத்தில் விராட் கோலி பேசியிருந்தார்.
‘நான் இந்த அணிக்காக என் இளமையை மொத்தமாகக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய உச்சக்கட்ட ஆட்டம் அனுபவம் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு சீசனிலும் வெல்ல வேண்டும் என்றே நினைத்திருக்கிறேன். கடைசியாக அது நடக்கையில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.
என்னுடைய ஒவ்வொரு அவுன்ஸ் ஆற்றலையும் இந்த அணிக்காகக் கொடுத்திருக்கிறேன். ஏபி டிவில்லியர்ஸ் இந்த அணிக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்.
அதையெல்லாம் வார்த்தைகளில் சொல்லமுடியாது. அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், இன்னமும் இந்த அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதை வென்றிருப்பது அவர்தான்.
நாங்கள் கோப்பையை வெல்கையில் அவரும் மேடையில் இருக்க வேண்டும். என்னுடைய இதயம், ஆன்மா எல்லாமும் பெங்களூருவுடன்தான் இருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
என்னுடைய கரியரின் கடைசி நாள் வரை பெங்களூரு அணிக்காகத்தான் ஆடுவேன்.
