
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீராணம் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் செயற்கை நீர் ஊற்று போன்று தண்ணீர் பீய்ச்சி அடித்தது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குழாய் மூலம் நாள்தோறும் 50 முதல் 75 கனஅடி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 235 கி.மீ, தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் வசிக்கும் மக்களின் குடிநீர் தாகத்தை தணிக்கும் வகையில், இக் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி (விக்கிரவாண்டி – கும்பகோணம் சாலை) கிராமம் மெயின் ரோடு அருகே உள்ள வீராணம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது.