
புதுச்சேரி: “கரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. முககவசம் அணிய வேண்டிய அவசியம் இப்போது இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளது” என்று புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுவை அரசு சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் உள்ள மேரி ஹாலில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணன் குமார் (பாஜக), எதிர்கட்சித்தலைவர் சிவா, பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், கேஎஸ்பி.ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.