
பரபரப்பாக நடந்து வரும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து முடித்திருக்கிறது. 20 ஓவர்களில் அந்த அணி 190 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. பேட்டிங்கில் ஆர்சிபி எங்கே சொதப்பியது? முக்கிய தருணங்கள் இங்கே
‘டாஸ் முடிவு…’
டாஸை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ்தான் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். அஹமதாபாத் மைதானத்தில் இந்த சீசனில் நடந்திருக்கும் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் முதலில் பேட் செய்திருக்கும் அணியே வென்றிருக்கிறது. சேஸ் செய்து வென்ற ஒரே அணி பஞ்சாப்தான். குவாலிபையர் 2 வில் மும்பைக்கு எதிராக சேஸ் செய்துதான் இறுதிப்போட்டிக்கே வந்தனர். அந்த நம்பிக்கையில் சேஸிங்கை எடுத்தார்.
பெங்களூரு அணி பேட்டிங்கை தொடங்கியது. பவர்ப்ளேயில் 55 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை இழந்திருந்தனர். முதல் ஓவரிலிருந்தே சால்ட் வேட்டையை ஆரம்பித்தார். சால்ட்டுக்கு ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை வீச வேண்டும் என்பதுதான் பஞ்சாபின் திட்டமாக இருந்தது. அர்ஷ்தீப் அப்படியே வீசினார். ஆனால், அந்த முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரியும் சிக்சரும் வந்தது.

பேட்டிங்குக்கு சாதகமான மைதானம் என்பதால் 230 க்கு மேல் எடுத்தால்தான் வெற்றிக்காக போட்டியிட முடியும் என பெங்களூருவுக்கு தெரியும். அதனால்தான் பவர்ப்ளேயில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிக ரன்களை எடுக்க நினைத்தனர். இதனால்தான் சால்ட் ஆடப்போகும் இன்னிங்ஸ் ரொம்பவே முக்கியமாகப்பட்டது. ஆனால், சால்ட் சேதாரத்தை ஏற்படுத்தும் முன்பே வெளியேற்றப்பட்டார். கைல் ஜேமிசன் வீசிய இரண்டாவது ஓவரிலேயே 127 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட ஒரு ஸ்லோயர் ஒன்னில் கேட்ச் ஆகி சால்ட் காலி.
இரண்டாவது ஓவரிலேயே மயங்க் அகர்வால் வந்தார். ஆரம்பத்திலேயே விக்கெட் விட்டதால் கோலி ஆங்கர் இன்னிங்ஸ் ஆடும் மனநிலைக்கு சென்றார். மயங்க் அகர்வால்தான் அட்டாக் செய்து ஆட நினைத்தார். அவருக்கு ஒன்றிரண்டு பந்துகள் சரியாகப்பட்டது. கோலி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டே இருந்தார். அதனால் பவர்ப்ளேயில் 55 ரன்கள் கிடைத்தது. பவர்ப்ளே முடிந்த உடனே சஹல் வந்தார். விக்கெட்டும் வந்தது. மயங்க் அகர்வால் 24 ரன்களில் காலி. கேப்டன் ரஜத் பட்டிதர் உள்ளே வந்தார். கோலி முழுக்க முழுக்க ஆங்கர் இன்னிங்ஸ் ஆடத் தொடங்கினார்.

பட்டிதர் ஸ்பின்னர்களுக்கு எதிராக திடமான வீரர் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். ஆனால், இந்த சீசனில் இதற்கு முன் சஹாலுக்கு எதிராக 2 முறை அவுட்டும் ஆகியிருக்கிறார். அப்படியிருந்தும் ரிஸ்க் எடுத்தார். சஹால் ஸ்டம்ப் லைனில் டைட்டாக வீசிய பந்துகளை சிக்சரும் பவுண்டரியும் ஆக்கினார். ஜேமிசன் டைட்டாக வீசிய ஓவரில் சிக்சரை பறக்கவிட்டார். ஆனாலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. குட் லெந்தில் வீசிவிட்டு ஸ்டம்புக்குள் ஃபுல்லாக இறக்கி வீச ‘Plumb’ ஆக LBW ஆகி 26 ரன்களில் வெளியேறினார் ரஜத் பட்டிதர். நம்பர் 5 இல் லிவிங்ஸ்டன் வந்தார்.
‘கோலி அவுட்!’
அடுத்த இரண்டு ஓவர்களுக்கு பவுண்டரியே வரவில்லை. சஹாலும் வைசாக்கும் சிறப்பாக வீசி சென்றனர். 13 ஓவர்கள் முடிவில் 111 ரன்களை பெங்களூரு எடுத்திருந்தது. அந்த சமயத்தில் டைம் அவுட். ப்ரேக்குக்கு பிறகு அட்டாக் செய்யும் மனநிலைக்கு பெங்களூரு சென்றது. கோலியும் பேட்டை வீசும் முடிவுக்கு சென்றார்.

இடைவேளைக்குப் பிறகு சஹல் வீசிய ஓவரில் கோலி ஒரு பவுண்டரியை அடிக்க, லிவிங்ஸ்டன் ஒரு சிக்சரை அடித்திருந்தார். 15 வது ஓவரை ஒமர்சாய் வீசினார். இந்த ஓவரில் பெங்களூருவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியை மடக்கி சிக்சருக்கு அடிக்க முயன்று எட்ஜ் ஆகி கோலி 43 ரன்களில் காலி. பெரிய விக்கெட். பஞ்சாப் பௌலர்கள் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்தினர். அப்படி நிறைய டெலிவரிக்களை வீசினர்
‘அதிரடியும் அடுத்தடுத்த விக்கெட்டுகளும்…’
நம்பர் 6 இல் ஜித்தேஷ் சர்மா வந்தார். ஜித்தேஷ் சர்மா வந்த வேகத்திலேயே அதிரடியாக ஆடி அசத்தினார். அர்ஷ்தீப் சிங்கின் 16 வது ஓவரில் இரண்டு பவுண்டரிக்கள். கைல் ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு சிக்சர்கள்.லிவிங்ஸ்டன் இதே ஓவரில் மேலும் ஒரு சிக்சரை அடித்தார். ஜேமிசனின் இந்த ஓவர் பெரிதாக மாறியது. லிவிங்ஸ்டன் அவுட்டும் ஆகியிருந்தார். ஒரு ஃபுல் டாஸில் லிவிங்ஸ்டன் LBW ஆகி வெளியேறினார்.

லிவிங்ஸ்டன் இதே ஓவரில் மேலும் ஒரு சிக்சரை அடித்தார். ஜேமிசனின் இந்த ஓவர் பெரிதாக மாறியது. லிவிங்ஸ்டன் அவுட்டும் ஆகியிருந்தார். ஒரு ஃபுல் டாஸில் லிவிங்ஸ்டன் LBW ஆகி வெளியேறினார். இந்த ஓவரில் 23 ரன்கள் வந்திருந்தது. அடுத்த ஓவரில் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. வைஷாக் வீசிய 18 வது ஓவரில் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ஜித்தேஷ் 24 ரன்களில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டை பறிகொடுத்து வெளியேறினார்.

கடைசி 2 ஓவர்களில் ரொமாரியோ ஷெப்பர்ட்டும் க்ரூணால் பாண்ட்யாவும் களத்தில் இருந்தனர். ஆனால், எந்த பலனும் இல்லை. அர்ஷ்தீப் சிங்கின் கடைசி ஓவரில் அடிக்க முயன்று அவுட் ஆகினர். அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்தார். பெங்களூரு அணி 190 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சில் 190 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு போதுமா என்பது சந்தேகமே. ஆர்.சி.பி பெளலர்கள் வெற்றியைப் பறித்துத் தருவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்