
மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இருபோக பாசனத்துக்கு கால தாமதமின்றி தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரையில் இன்று நடந்த விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
மதுரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான, விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் பென்னிகுயிக் அரங்கில் நடைபெற்றது. இதற்கு பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் பாரதி தாசன் தலைமை வகித்தார். மேலூர் பிரிவு உதவி செயற் பொறியாளர் சிவபிரபாகரன், உதவி பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.