
மதுரையில் நடந்த தி.மு.க பொதுக்குழுவில், “அடுத்த ஆண்டு இதே நேரத்தில், ஏழாவது முறையாக தி.மு.க ஆட்சி அமைத்து, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றோம் என்பது தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும்” என்கிற கனவை முன்வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ஆனால், பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பே, சாக்கடையாகிப்போன பந்தல்குடி கால்வாயை வண்ணத் துணிகளால் அதிகாரிகள் மறைத்தது பரபர சர்ச்சையானது. வேறு வழியின்றி, முதல்வரே நேரில் சென்று கால்வாயைப் பார்வையிட்டு பிரச்னையைச் சமாளிக்கும்படி ஆனது.
2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கான முன்னோட்டமாக, நீண்ட தூர ரோட் ஷோவில் பங்கேற்று, பொதுக்குழுவிலும் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலினின் மனது குளிரும்படி, பொதுக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளார் அமைச்சர் மூர்த்தி.

பொதுக்குழு தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…
* மே 31-ம் தேதி மதியம், மதுரை வந்த முதலமைச்சர், விமான நிலையம் அருகிலுள்ள ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். பின்பு, மாலை 5 மணிக்கு பெருங்குடியிலிருந்து ரோட் ஷோவைத் தொடங்கினார்.
* ரோட் ஷோவால் தெற்குவாசல், பெரியார் பகுதியிலிருந்து வில்லாபுரம், அவனியாபுரம், திருமங்கலம், அருப்புக்கோட்டை நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். இன்னும் பல பகுதிகளிலும் போக்குவரத்து திணறியது.

* ‘மேயர் முத்து சிலை திறப்புக்குப் பின், முதல்வர் ஓய்வெடுக்கச் செல்கிறார்’ என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், சத்ய சாய் நகரிலுள்ள மு.க.அழகிரியின் வீட்டுக்கு காரில் சென்றார் ஸ்டாலின். அப்போது, தன் உதவியாளரைத் தவிர எந்த அமைச்சரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை.
* ஸ்டாலின் வீட்டுக்குள் சென்றபோது, அழகிரியின் விசுவாசிகள் பி.எம்.மன்னன், எம்.எல்.ராஜ், கவுஸ் பாட்சா உள்ளிட்டவர்களை செக்யூரிட்டிகள் ஹாலுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டனர். வீட்டுக்குள் வரவேற்று, துண்டு போர்த்தி கட்டி அணைத்துக்கொண்ட அழகிரியிடம், துரை தயாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து 15 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார் ஸ்டாலின். பின், இடியாப்பம் பாயாவுடன் டிபன் சாப்பிட்டவர், அழகிரியிடம் மனம்விட்டு சில நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பினார்.

* மதுரை உத்தங்குடியில், சர்ச்சைக்குரிய கிரானைட் அதிபருக்குச் சொந்தமான 22 ஏக்கர் பரப்பிலான மைதானத்தில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தை பெயர்த்து எடுத்துவைத்தது போல நுழைவு வாயிலுடன் அமைக்கப்பட்ட கலைஞர் அரங்கத்தில் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள், 3,500 சிறப்பு அழைப்பாளர்கள் என 7,000 பேர் அமரும் வகையில் குளிரூட்டப்பட்ட அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
அதன் அருகிலேயே ஒரே நேரத்தில் 2,000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையிலும், பார்வையிட வந்திருந்த கட்சியினர் 15,000 பேர் உணவருந்த வெளி வளாகத்தில் இரண்டு இடங்களிலும் உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

* பொதுக்குழு உறுப்பினர்கள் அடையாள அட்டை பெற்றுச்செல்லும் வகையில், 20 பூத்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிரபலமான மதுரை மணப்பட்டி சமையல்காரர்களுடன் காரைக்குடி, தஞ்சாவூர், ராமநாதபுரம் பகுதி சமையல்காரர்களும் இணைந்து சமையல் செய்தனர்
இரண்டடி நீள வாழை இலையில் மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் உப்புக்கறி, கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சரம் மீன் வருவல், நாட்டுக்கோழி மிளகுக் கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்புக் குழம்பு, அயிரைமீன் குழம்பு என 25க்கும் மேற்பட்ட அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. மேலும் கதம்பப் பொரியல், உருளைக்கிழங்கு காரக்கறி, சைவச் சிக்கன் வறுவல், சைவமீன் ப்ரை, சிப்பி காளான் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, எண்ணெய்க் கத்தரிக்காய் காரக் குழம்பு என 25 க்கும் மேற்பட்ட சைவ உணவுகளுடன் ஐஸ் க்ரீம், பீடா, பேமஸ் ஜிகர்தண்டாவும் வழங்கி அசத்தினார்கள்.

* பார்வையிட வந்த கட்சியினருக்கான உணவுக்கூடங்களில் உள்ளூர் ஆட்கள் பரிமாற, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான ஏ.சி உணவுக் கூடத்தில் பரிமாற கேரளாவிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடையில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
* பொதுக்குழுவுக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாததால், பெரும் அப்செட்டோடு அமர்ந்திருந்தார். அதேபோல, மதுரை மேயர் இந்திராணி, கணவர் பொன்வசந்த் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், அவரும் அப்செட்டாக அமர்ந்திருந்தார்.

பொதுக்குழு குறித்துப் பேசுகிற கட்சியின் சீனியர்கள், “இந்த மாதிரி பிரமாண்டக் கூட்டம் நடத்தினால் மட்டும் போதுமா? அடிமட்டத் தொண்டர்கள் வெறுத்துப்போயுள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் மட்டும்தான் வளமாக உள்ளனர். மேலும், கட்சியிலுள்ள புகார்களை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.
கலைஞர் காலத்தில், நடந்த பொதுக்குழுக்களில் தலைமைக் கழக, மாவட்டக் கழக நிர்வாகிகள் மீதான புகார்களை தெரிவிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். சம்பந்தப்பட்டவர்களை அப்போதே கூப்பிட்டு கண்டிப்பார் கலைஞர். இப்போதோ, முதலமைச்சரின் பேச்சைக் கேட்டுவிட்டு, போடுகிற சோற்றைத் தின்றுவிட்டு கலைந்துபோகும் நிகழ்வாகப் பொதுக்குழு மாறிவிட்டது” என்றனர்

பொதுக்குழுக் கூட்டம் கட்சியினருக்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாம்!