• June 3, 2025
  • NewsEditor
  • 0

ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு கையாளும் விதம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து தனது சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை பார்வதி குறிப்பிட்டதாவது “முதல்வர் பினராயி விஜயனை டேக் செய்து இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை இப்போது கவனிக்கலாமா? தொழில்துறையில் ஒழுங்குமுறைகளை உருவாக்க உதவும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறீர்களா? அதில் என்ன நடக்கிறது? அவசரம் இல்லையா? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே தானே ஆகிறது?” என்று ஹேமா கமிட்டி அறிக்கையின் தாமதம் குறித்து நடிகை பார்வதி சாடியுள்ளார்.

ஹேமா கமிட்டி என்பது?

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீடு திரும்புகையில் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் உள்ளிட்ட அனைத்து நிலை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள சினிமா துறையின் பெண்கள் அமைப்பு WCC முதல்வர் பினராயி விஜயனுக்கு மனு அளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் பணிபுரியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. நீதிபதி ஹேமா தலைமையில் இந்த கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதி ஹேமா கமிட்டி தனது அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 40 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 30 வழக்குகள் குற்றப்பத்திரிகை கட்டம் வரை எட்டியது.

பல போராட்டங்களுக்குப் பிறகு 2024 ஆகஸ்ட் மாதம் ஹேமா கமிட்டியின் ஒரு பகுதி வெளியானது. அதன் அடிப்படையில் இது சம்பந்தமான நடிகர்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையில் பல புகார் தாரர்கள், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க விரும்பாததுதான் சில வழக்குகள் கைவிட்டதற்கான காரணம் என்று காவல்துறை கூறியதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு புலனாய்வு குழுவால் ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளில் 21 வழக்குகள் மூடப்பட்டு விட்டன. மீதமுள்ள 14 வழக்குகளும் வரும் வாரங்களில் திரும்ப பெற கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நடிகை பார்வதி ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு கையாளும் விதம் குறித்து விமர்சித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *