
புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி இன்று மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருக்கிறது. அதேபோல கொரோனாவுக்காக முகக்கவசம் அணிய வேண்டிய தேவை இப்போது இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் தயார் நிலையில் இருக்கின்றன.
மருந்துகள் போதிய அளவில் இருக்கின்றன. கொரோனா விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன” என்றார்.
தொடர்ந்து, `கொரோனா தொற்று மற்றும் வெய்யிலின் தாக்கம் அதிகரிப்பால் பள்ளி திறப்பை தள்ளிப் போட வேண்டும் என்று எழும் கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இப்போதுதானே பள்ளிகளை திறந்திருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து, `2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிக்குமா அல்லது அணி மாறுமா ?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், மௌனமாக கடந்து சென்றார்.