• June 3, 2025
  • NewsEditor
  • 0

கணவன் மனைவி இடையே சண்டை வந்தால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.

மும்பை மலாடு பகுதியில் வசித்து வரும் ஷீலா, தனது கணவர் இறந்த பிறகு சஞ்சய் என்பவருடன் 2020-ம் ஆண்டில் இருந்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். ஷீலா தனது முதல் திருமணத்தில் பிறந்த மகனை தாயார் வீட்டில் விட்டிருந்தார்.

ஷீலா, சஞ்சயுடன் வாழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், ஷீலா தனது மூத்த மகனை தனது தாயார் வீட்டில் இருந்து அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.

இதனால் ஷீலா – சஞ்சய் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஷீலாவின் மூத்த மகனை சஞ்சய் அடிக்கடி அடித்து உதைத்து வந்தார்.

ஷீலாவின் தாயாரும், அவரது சகோதரியும் ஒரு முறை ஷீலாவின் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஷீலாவின் தாயாரிடம் மூன்று குழந்தைகளையும் இரண்டு பேரும் அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை கூறியதோடு, அந்த வீடியோ காட்சியையும் காண்பித்தனர்.

இதையடுத்து ஷீலாவின் தாயார், இவர்களை தனது வீட்டிற்கு அருகில் வசிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் ஷீலாவின் தாயார் அடிக்கடி அங்கு சென்று பார்த்து வந்தார்.

ஷீலாவின் லிவ் இன் பார்ட்னர் சஞ்சய் அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதை தெரிந்து கொண்டார். அதோடு போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு ஷீலாவின் மூத்த மகனை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்தது. சஞ்சய் அவ்வாறு அடித்து உதைக்கும்போது ஷீலாவும் தனது பங்கிற்கு சஞ்சய் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் மாறி மாறி குழந்தைகளை அடித்து உதைத்து வந்தனர்.

குழந்தைகளை துன்புறுத்தல்

இதையடுத்து ஷீலாவின் தாயார் இது குறித்து மால்வானி போலீஸில் புகார் செய்தார். அவர் தனது புகாரில் மூன்று குழந்தைகளும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ஷீலாவின் வீட்டிற்கு சென்றபோது குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தெரிந்துகொண்டதாகவும், தனது மகளும், அவரது பார்ட்னரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று தெரியவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஷீலா மற்றும் அவரின் லிவ் இன் பார்ட்னர் மீது கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராக போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். அதோடு மூன்று குழந்தைகளையும் போலீஸார் மீட்டு தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் தங்க வைத்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *